ஜகநாதா, குரு பரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!
திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! – செக
முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ?
எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே.
அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே.
மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே.
தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே.
அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே.
DOWNLOAD PPT