சூசன்னா வெஸ்லி.... ஜான் வெஸ்லி, சார்லஸ் ஆகியோர் உட்பட, பத்தொன்பது பிள்ளைகளின் தாயாக இருந்தார்கள். பலவிதமான இன்னல்களின் ஊடாகச் சென்ற அவர்கள், தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கிறிஸ்தவ பக்தியின் இலக்கைப் பதியச் செய்யும்படி, தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக, தேவனுக்கு அர்ப்பணித்தார்கள். உலகத்தையே மாற்றும்படி, அவர்களுடைய பிள்ளைகள் முன்னோக்கிச் சென்றனர். தன்னுடைய வீட்டில் பின்பற்றும்படி அவர்கள் ஏற்படுத்திய பதினாறு விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. உணவு வேளைகளுக்கு இடையில் உண்பது அனுமதிக்கப்படமாட்டாது. 2. சிறுவர்களாக இருக்கும் அவர்கள், இரவு எட்டு மணிக்குப் படுக்கைக்குச் சென்று விட வேண்டும். 3. மருந்துகள் கொடுக்கப்படும் பொழுது, அவர்கள் எந்த விதமான குறையையும் கூறாமல், அவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். 4. சிறு பிள்ளைகளின் சுயசித்தத்தை உடைக்கவேண்டும். அதன் ஆத்துமாவை இரட்சிப்பிற்குள் வழிநடத்தும்படி, தேவனுடன் சேர்ந்து உழைக்கிறவர்களின் சுயசித்தமும் உடைக்கப்பட வேண்டும். 5. ஒரு சிறுபிள்ளை பேச ஆரம்பித்தவுடன் அதற்கு ஜெபிப்பதற்குக் கற்றுத் தர வேண்டும். 6. குடும்ப ஆராதனையின்போது, அனைவரும் அமைதியாக இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 7. அவர்கள் அடம்பிடித்துக் கேட்கிற எந்தப் பொருளையும் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. ஆனால் அவர்கள் மரியாதையுடன் கேட்கிற பொருளை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 8. பொய் பேசுவதைத் தடுக்கும்படி, முன் கூட்டியே அறிக்கையிட்டு, மனந்திரும்பிய எந்தப் பாவத்திற்கும் தண்டனை கொடுக்கக் கூடாது. 9. பாவமான ஒரு செயல், ஒருபொழுதும் தண்டிக்கப்படாமல், விட்டுவிடப்படக்கூடாது. 10. ஒரே குற்றத்திற்காக ஒரு பிள்ளையை இரண்டு முறை தண்டிக்கக் கூடாது. 11. பிள்ளைகள் நல்ல முறையில் நடந்துகொள்ளும் பொழுது, அதைப் பாராட்டி அவர்களை மகிழ்விக்கும்படி ஏதாவது வெகுமதியைக் கொடுக்க வேண்டும். 12. குடும்பத்தினரை மகிழ்விக்கும்படி ஒரு சிறு பிள்ளை ஏதாவது ஒரு செயலைச் செய்யும்படி முயற்சி செய்து, அதைச் சரியான விதத்தில் செய்யாவிட்டாலும் கூட, அந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும். 13. சிறிய காரியங்களில் கூட, அவரவருக்குரிய பொருட்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். 14. வாக்குக் கொடுத்த எல்லாக் காரியங்களையும் நிறைவேற்ற வேண்டும். 15. ஒரு மகள் நன்றாக படிக்க இயலும் வரை அவளை வேலைவாங்க வேண்டும். 16. பிரம்பிற்குப் பயப்படும்படி பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்