விடுமுறை நாளன்றில் ஒரு சிறுவனை அவனுடைய அப்பா தன் சொந்தக் கிராமத்திலிருந்து அருகிலிருந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்கும்படி அழைத்துச் சென்றார். அவன் தன் சிறுவயது முதல் அந்தக் கிராமத்திலேயே வளர்ந்துவந்ததால் நகரத்தின் பல காட்சிகளும் அவனைப் பரவசத்தில் ஆழ்த்தின. அது மட்டும் இல்லை, அவன் தன் அம்மா வை விட்டு ஒரு நாள் முழுவதும் பிரிந்திருந்ததும் அவனுக்கு முதல் தடவை. எனவே தான் கண்டு களித்தவைகளைத் தன் அம்மாவிடம் சொல்ல அவனது உள்ளம் துடித்தது. எனவே அவன் தன் அம்மாவோடு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்புவதாகத் தன் அப்பாவிடம் கூறினான். அவர் அவனது விருப்பத்திற்கிணங்கி, அருகிலிருந்த ஒரு தானியங்கி தொலைபேசி நிலையத்தை அவனுக்குக் காண்பித்துவிட்டு வெளியே நின்றார். அவன் அதற்குள் சென்றபோது அவ்வறை முழுவதுமே இருட்டாக இருந்ததால் தொலைபேசிக் கருவியில் நம்பரை பார்க்க முடியவில்லை, தன் அம்மாவிடம் தொடர்புகொள்ள முடியாமல் திகைத்தான். தடுமாறிய அவன் வெளியே நின்று கொண்டிருந்த தான் அப்பாவிடம் உதவியை நாடினான். அவனுடைய அப்பா அவனிடம், "நீ உள்ளே சென்று கதவை அடைத்தால் வெளிச்சம் கிடைக்கும்' என்று கூறினார். உள்ளே இருக்கும் தானியங்கி விளக்கு ஒளிகொடுப்பதற்கு அவ்வறையின் கதவு அடைக்கப்பட வேண்டும் என்னும் உண்மை அப்போதுதான் அவனுக்குப் புலப்பட்டது. மேற்காணூம் சந்தர்ப்பம் மிக அருமையானதொரு வேதாகம சத்தியத்தை உனக்கு வெளிப்படுத்துகிறது. பலவிதமான போராட்டங்களும், சோதனைகளும், கலக்கங்களும் நிறைந்த இருள் சூழ்ந்ததொரு நிலையில் நீ காணப்படுகிறாயா?உன் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிராசிக்க வேண்டுமானால், நீ செய்ய வேண்டியதொன்றுண்டு. "உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்'' (மத். 6:6)