"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்'' (மத். 5:13) உலக சரித்திரத்திலும் நமது வாழ்க்கையிலும் உப்பு மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆதிவாசிகளின் மத்தியிலே ஒரு மூட்டை உப்பு ஒரு மனிதனுடைய விலைக் கிரயமாக இருக்கிறது. ஆதி காலங்களிலெல்லாம் ஜெர்மானியர்கள் உப்புள்ள இடங்களிலேயே கூடி ஆராதனை செய்து வந்தார்கள். கிழக்கத்திய நாடுகளில் உப்பு என்பது நட்புறவின் சின்னமாக இருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் உப்பை பரிமாறி தங்கள் நட்பை உறுதி செய்துக்கொள்வார்கள். திபெத் போன்ற நாடுகளில் உப்பானது பண்ட மாற்று முறையிலே நாணயமாக பயன் பட்டது. இயேசுகிறிஸ்து கிறிஸ்தவர்களை உப்புக்கு ஒப்பிட்டுச் சொன்னார். உணவிலே மூன்று சதவீதம் உப்பை சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு சுவையாக இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய தேசத்தில் கிறிஸ்தவர்களாகிய நாமும் மூன்று சதவீதமாகவே திகழ்கிறோம். நாம் உப்பாக இருப்பது நமது தேசத்திற்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாகும்! ஒருமுறை ஒரு ராஜா தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் கூப்பிட்டு என்னை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள்? என்று கேட்டார். முதலாவது பெண் நான் உங்களை வெள்ளியைப் போல விலை மதிக்க முடியாத மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன் என்றாள். இரண்டாவது மகள் உங்களை பொன்னைப் போல நேசிக்கிறேன் என்றாள். மூன்றாவது மகள் நான் உங்களை உப்பைப் போல நேசிக்கிறேன் என்றவுடன் ராஜாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. மூன்றாவது மகளின் மேல் ராஜா கோபமாக இருக்கிறதைக் கண்ட சமையல்காரன் அன்று அந்த ராஜாவுக்கு உப்பு போடாமல் சமையல் செய்து வைத்தான். அப்பொழுது அந்த கடைசி மகள் ராஜாவினிடத்தில் வந்து, உப்பில்லாத உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள். என் வாழ்க்கைக்கு சுவையூட்டி, மேன்மைப்படுத்துவதெல்லாம் நீங்கள் தான் என்றுச் சொன்னபோது ராஜா அதை உணர்ந்துக் கொண்டார். ஆம், நாம் உப்பாக உலகத்திற்கு கரைந்து சுவை கொடுப்பவர்களாக இருக்கிறோம். உப்புக்கு இன்னுமொரு குணாதிசயம் உண்டு. அது வேகமாக கரைந்து பரவும் தன்மையாகும். அது உணவிலே பரவி தன்னுடைய குணாதிசயத்தை மிக விரைவில் உணவோடு கலந்து விடுகிறது. அதுபோல நாமும்கூட மிக வேகமாக ஊழியம் செய்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க, ஊழியம் செய்ய கடமைப்பட்டிருக்கிறேம் (2 கொரி. 2:14)