ஒரு ஏழைத்தாய் தன் மகனைப் படிக்க வைக்க விரும்பி பட்டணத்திலுள்ள ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். அவன் அங்கேயுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து படித்துக்கொண்டு வந்தான். சில மாதங்களுக்குப் பின் தன் மகனைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தாய்க்கு அதிகமாக வரவே நிறைய பலகாரங்களைச் செய்து எடுத்துக்கொண்டு, பட்டணத்திலுள்ள அவன் கல்லூரி அறைக்கு வந்தாள். அந்த அறையைத் திறந்ததுமே, தாய்க்கு அதிர்ச்சியாயிருந்தது, ஏனெனில் அந்த அறை முழுவதும் சினிமா நடிகைகளின் படங்கள், ஆபாசப் படங்களை ஒட்டி வைத்திருந்தான். அந்தக் கிறிஸ்துவ தாயின் உள்ளம் ஆழமாய்க் குத்துண்டது. அவள் ஒன்றும் பேசவில்லை. வீட்டுக்கு வந்ததும் அந்தத் தாய் தன் போட்டோ ஒன்றை மகனுக்கு அனுப்பி, "மகனே என் போட்டோவையும் உன் அறையில் மாட்டி வை" என்று கேட்டுக்கொண்டு கடிதம் எழுதினாள். சில மாதங்கள் கடந்தன. தாய் மறுபடியும் மகனைக் காணச் சென்றாள். அங்கே தாயின் போட்டோவைத் தவிர வேறு படங்கள் இல்லை. "அம்மா, உங்கள் படத்தின் அருகே, வேறு எந்த படத்தையும் வைக்க நான் வெட்கப்படுகிறேன்" என்றான் மகன் வேதம் சொல்லுகிறது. "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" (1கொரி 13:10). இருளை நீக்க வேண்டும் என்றால் இருளோடு போராடாமல், விளக்கை ஏற்றி வையுங்கள். இருள் தானாக விலகி ஓடும். தேவபிள்ளைகளே, கிறிஸ்து உங்கள் வாழ்க்கையின் வெளிச்சமாக உங்கள் உள்ளத்தில் இருக்கிறாரா?