ஒரு மீனவன் தன் படகின் அருகே அமைதியாக உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த ஒரு செல்வந்தன் அவனைப் பார்த்து, "நீ ஏன் கடலைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாய்' என்று கேட்டான். அதற்கு மீனவன் "எனக்கு இன்றைக்குத் தேவையான மீனை நான் பிடித்துவிட்டேன்; ஆகவே அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன்" என்றான். செல்வந்தன் அவனைப் பார்த்து நீ இன்னும் கடலுக்குப்போய் உழைத்தால் அதிகமான மீன்களைப் பிடிப்பாய்; உன் வாழ்க்கை முன்னேறும்; தினந்தோறும் அதிக மீன்களைப் பிடிப்பதனால் நீ நைலான் வலை வாங்கலாம்; ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு விசைப்படகு வாங்கலாம்; பின் நீ அனேக படகுகளுக்கு அதிபதி ஆகலாம்' என்றான். இதைக் கேட்ட மீனவன், "அதற்குப் பிறகு நான் என்ன செய்யமுடியும்' என்றான். செல்வந்தன் அவனைப் பார்த்து, "பின்பு நீ அமர்ந்திருந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கலாம்" என்றான். மீனவன் அவனைப் பார்த்து "நான் இப்போதும் அமர்ந்திருந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறேன்" என்று பதில் கூறினான். சிலர் வாழ்க்கையில் எது கிடைத்தாலும் திருப்தி அடைவதில்லை. கடினமாக உழைப்பதிலோ, சம்பாதிப்பதிலோ தவறில்லை. ஆனால் சம்பாத்தியமே ஒரே குறிக்கோளாக மாறிவிடும்போது வாழ்க்கையில் அமைதி, சமாதானம், ரம்மியம் போன்றவை இருப்பதில்லை. இதனால் சரீரமும் குடும்பமும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்ற ரம்மியமான மனதோடு வாழ்க்கை நடத்த வேண்டும். உங்களுக்கு இல்லாததைக் குறித்து யோசித்து வாழ்க்கையை வீணடிப்பதற்குப் பதிலாக, உங்களிடம் இருப்பதற்காக தேவனே ஸ்தோத்தரித்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்துங்கள். உங்கள் தேவைகளை தேவன் அறிந்திருக்கிறார். "உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்' .1தீமோ 6:8