அவர், ஒரு முதியவரான கட்டக் கலைஞர், கடும் உழைப்பாளி, எதையும் நேர்த்தியாய், உறுதியாய், அழகாய்ச் செய்பவர். பல நூறு வீடுகளை, ஒப்பந்தக்காரரான தன் எஜமான் எடுக்கும் ஆர்டர்களுக்குக் கட்டிக் கொடுத்துப் புகழ் சம்பாதித்தவர், அவருடைய கட்டுமானத்தில் ஒரு தனித்தன்மை, ஒரு நேர்த்தி, ஒரு முத்திரை இருக்கும். பலரும் இவரே தங்கள் வீடுகளைக் கட்டவேண்டுமென விரும்பி, இவரது எஜமானனுக்கு ஆடர்கள் கொடுப்பார்கள். இப்போது சற்றே வயதாகிப் போனதால், தனது வேலையினின்றும் விலகி, எஞ்சியுள்ள வாழ்வுக் காலங்களைத் தன் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியுடன் கழித்திட விரும்பினார். தனது முடிவை எஜமானிடம் கூறியபோது அவர் அதிர்ந்து போனார். இப்படி ஓர் உழைப்பாளி தனக்குக் கிடைக்கமாட்டார் என்பதால், 'இன்னும் கொஞ்சக் காலம் மட்டுமாவது உதவியாய் இருங்கள்" என்று கேட்டுப்பார்த்தார். "இல்லை ஐயா... என்னால் முடியவில்லை மன்னியுங்கள்" என்றார். கட்டடக் கலைஞர். எஜமான் "சரி உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்.... ஆனால் ஒரே ஒரு வீட்டை மட்டும் எனக்குக் கட்டித் தந்துவிட்டு ஓய்வுபெறுங்கள்" என்று சொல்ல இவரும் அரைமனதுடன் சம்மதித்தார். அதன்படி இப்போது அவர் அதிகம் மினக்கெடாமல், மலிவான, தரம் குறைந்த மரங்கள், சிமெண்ட், எலெக்ட்ரிக்கல் ஃபிட்டிங்ஸ், டைல்ஸ், என்பவற்றைப் பயன்படுத்தி முழுமனமின்றி, வெகுவிரைவில் ஒரு வீட்டைக் கட்டி முடித்தார். எஜமான் வந்து பார்த்தார். பார்வையெல்லாம் முடிந்ததும், கட்டடக் கலைஞரை அழைத்து அந்த வீட்டின் முன் வாசல் திறவுகோல் அடங்கிய சாவிக்கொத்தை அவர் கையில் கொடுத்து, "இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் எங்களிடம் உண்மையாய் உழைத்ததற்கு நான் உங்களுக்குத் தரும் பரிசுதான் இந்தவீடு" என்றார். கட்டடக் கலைஞருக்கு அதிர்ச்சியாகவும், அவமானமுமாக இருந்தது.நமக்காகக் கட்டுவது தெரிந்திருந்தால், இதுவரை நாம் கட்டின வீடுகள் போல் இதையும் இன்னும் உயர்தரப் பொருட்களைப் பயன்படுத்தி இன்னும் ஈடுபாடுகாட்டி, பலமாய், உறுதியாய், அழகாய்க் கட்டியிருக்கலாமே என மனம் நொந்துபோனார். இனி என்ன செய்ய? பேசினாலும், வாழ்ந்தாலும் எதைச் செய்தாலும் மனிதருக்கு என்று செய்யாமல் கர்த்தருக்கென்று செய்யுங்கள். ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.