போட்டியும் பொறாமையும் மலிந்துவரும் இந்நாட்களில் ஒற்றுமை என்பது காணக்கிடைக்காத ஒன்றாகிவிடுமோ என்ற பயம் உள்ளது. எதிலும் பிரிவினைகள். ஒற்றுமைக்காக எழுந்த சங்கங்களில் தான் எத்தனை எத்தனை பிரிவுகள், சண்டைகள், சச்சரவுகள், உட்பூசல்கள், அதிகாரவெறி. இவைகள் தேவனுடைய சபையையும் விட்டு வைக்கவில்லை. கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு மத்தியில், நான்தான் பெரியவன், நீ சிறியவன் என்ற ஆணவப்போக்கு தோன்றி சச்சரவு தொடங்கி விட்டது. கட்டை விரல் என்னுடைய உதவியின்றி உங்கள் நான்கு பேராலும் எதையும் தூக்கவோ, எந்த வேலையும் செய்யவோ முடியாது என்று செருக்குடன் சொன்னது. அடுத்த விரல், எதையும் குறிப்பிட்டு சுட்டிகாட்டும், திறமை எனக்குத்தான் உண்டு எனவே எனக்கு ஆள்காட்டி விரல் என்ற பெயரே உள்ளது என்றது. நடுவிரல் நான்தான் எல்லாரிலும் உயரமானவன் என்று உயர்ந்த தோரணையோடு நிமிர்ந்து நின்றது. அடுத்தவிரல் நான்தான் பணக்காரன், அழகானவன், எனவேதான் மனிதர் என் விரலில் மோதிரம் அணிவித்து அழகுபார்க்கின்றனர். எனக்கு மோதிரவிரல் என்ற தனிப்பெருமை உண்டு என்றது. சுண்டு விரல் சும்மா இருக்குமா? நான்தான் வீரமானவன், சவாலை விடும்போது சுண்டு விரலைகாட்டித்தான் உன்னால் இதை அசைக்க முடியுமா என சாவால் விடுகிறான் மனிதன். மற்றும் கைகூப்பி ஸ்தோத்திரம் சொல்லும்போது முன் நிற்பவன் நான்தான் என மற்றவரின் வாயை அடைத்தது. இப்படி பேதம் பேசி பிரிவினை உண்டாக்கும் தீய சக்தி தேவ மக்களை அண்ட இடம் கொடுக்கலாமா? கூடாது. ஒருவர் இல்லாமல் மற்றவருக்கு மதிப்பும் மரியாதையும் வரமுடியாது. எனவே ஏழை, பணக்கரன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எண்ணம் தவிர்த்து ஒன்றுபட்டு ஊழியம் செய்வோம். தேவனுடைய திருச்சபை ஒன்றாக இணைந்து ஊழியம் செய்தால், ஒருவர் மனந்திரும்புகிற இடத்தில் 100பேர் மனந்திருபுவார்கள். தேவபிள்ளைகள் ஒன்றுபட்டால் சாத்தான் வெட்கப்பட்டு போவான்.