ஒரு சிறு பெண் தன் வீட்டில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டில் இல்லை என்ற தைரியத்தில் எதைக்குறித்தும் கவலைப்படாமல் லாவகமாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவளுடைய வலது கைபட்டு மேஜையிலிருந்த கண்ணாடிக் கோப்பை கீழே விழுந்து உடைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரே வழி, அம்மாவுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஒரு டவ்வலை எடுத்து மூடி விட்டாள், தன் தவறு அம்மாவுக்கு தெரியாது என்பது இக்குழந்தையின் எண்ணம் ஆகவே மூடிவிட்டு ஒன்றுமே அறியாதவள் போல மிகவும் பயபக்தியுடன் அமர்ந்திருந்தாள். அம்மா வீட்டுக்குள் வந்து பார்த்தவுடனேயே அம்மாவுக்கு புரிந்துவிட்டது. மகளை அழைத்து கண்ணாடி கோப்பை எப்படி உடைந்தது என்று கேட்டார்கள். அவள் சற்றும் தயங்காது, "பூனை கீழே தட்டி விட்டிருக்கும்" என்றாள். அம்மா சிரித்தார்கள் மகளே பூனை ஒரு வேளை தட்டி விட்டிருக்கலாம். ஆனால் பூனைக்கு டவ்வலை எடுத்து மூடிவைக்க தெரியாதே. ஆகவே நீ தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று கூறி தண்டனையும் கொடுத்தார்கள். ஆதாமும் ஏவாளும் தவறு செய்தவுடன் தவறை மறைக்க ஒடி ஒளிந்தனர். ஆதாம் ஏவாளையும், ஏவாள் சர்ப்பத்தையும் தங்கள் தவறுக்கு காரணம் என்று பழி சுமத்தினர். ஆனால் பாவத்தை மறைக்க நினைக்கிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது, என்றாகிலும் ஒருநாள் பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்கும் (எண் 32:33). நாம் மறைவிடங்களில் செய்யும் பாவங்களைக் கூட தேவன் நியாயத்தில் கொண்டுவருவார் (பிர 12:14). ஆகவே பாவத்தை மறைப்பதாலோ, வேறொருவருவார் பழி சுமத்துவதாலோ நமக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. மாறாக, நம் பாவங்களை நாம் அறிக்கையிட்டால், தேவன் நமக்கு மன்னிப்பு தருவார், நாம் பாவங்கள் கழுவப்படுவோம், இரக்கம் பெறுவோம் (1யோ 1:9). "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்" நீதி 28:13