ஒரு துடிப்புள்ள சிறுவன் பல வண்ணங்களில் பட்டங்கள் செய்து, பறக்கவிட்டு மகிழ்வது அவனது வழக்கம். ஒருமுறை அவன் தன் முழு பெலனையும் செலவிட்டு நேர்த்தியாய் ஒரு அழகான பட்டத்தை உருவாக்கினான். பின்னர் அதை வானத்தில் பறக்கவிட்டான். ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்தது. இதைப் பார்த்த பட்டத்தின் உரிமையாளருக்கு மிகுந்த சந்தோஷம். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவனுடைய கையிலிருந்த பட்டத்தின் கயிறு பெருங்காற்றினால் அறுந்து போய்விட்டது. பட்டம் மிக வேகமாய் பறக்க ஆரம்பித்தது. பதட்டத்தோடு விரைவாய் பட்டத்தை பிடித்துக்கொள்ளும்படி ஓடினான். ஆனாலும் பட்டம் வெகு தொலைவிற்கு போய்விட்டதால் அவனால் அதை பிடித்துக்கொள்ள முடியவில்லை. பல நாட்கள் திட்டமிட்டு வடிவமைத்த பட்டம் அவன் கையை விட்டு நழுவியது. அது அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகிவிட்டது. ஒருநாள் பெரிய காட்டினுள் சென்று பட்டத்தை தேடினான். அங்கே பெரிய முள்மரத்தில் பட்டம் மாட்டி தொங்கி கொண்டிருப்பதை பார்த்தான். அவனது உள்ளம் உடைந்தது. ஐயோ, நான் உருவாக்கிய பட்டத்திற்கோ இப்படிப்பட்ட பரிதாப நிலை என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது பட்டம், ஐயோ முள் என்னை குத்துகிறது யாராவது என்னை காப்பாற்றமாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு இருப்பதை பார்த்து கண் கலங்கினான். இந்த பட்டத்தை விட்டு போக மனமில்லை. மரம் ஏற துணிந்தான். மரம் முள் மரமாக இருந்தால் இவன் கை. கால், முதுகு என குத்தியது. இரத்தம் சொட்ட அதை பொருட்படுத்தாமல் நான் உருவாக்கிய பட்டத்தை எப்படியாகிலும் எடுத்து விடவேண்டுமென்று தீவிர முயற்சிக்கு பின் அதை எடுத்தான். அவன் உடலெல்லாம் இரத்தம் வடிந்து கொண்டிருக்க, வேதனை ஒருபுறம் இருக்க, அவன் முகத்திலோ மகிழ்ச்சி. காரணம் தான் உருவாக்கிய பட்டத்தை இரத்தம் சிந்தி மீட்டெடுத்தான். இதைப்போலத்தான் நாம் செய்த சிறு சிறு பாவங்கள் தேவனை விட்டு நம்மை பிரித்தது. தேவன் நம்மை விடுவித்தார்.