பிறரைத் துன்பப்படுத்துவது; அவர்களுடைய நற்பெயரைக் கெடுப்பது; அவர்களுடைய தொழிலை நஷ்டப்படுத்துவது போன்ற செயல்களில் உலக மக்கள் அநேகர் ஈடுபடுகிறார்கள். இவை யாவற்றுக்கும் பொறாமையே காரணம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இத்தகைய காரியங்களில் ஈடுப்படுகிறவர்கள் தங்களுக்கே அதிக கேடு வருவித்துக் கொள்கிறார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு விளையாட்டு வீரனுக்கு அவன் திறமைகளைப் பாராட்டி அந்நாட்டு மக்கள் சிலைவைத்தார்கள். அவனுடைய விளையாட்டில் போட்டியாக இருந்த வேறொரு வீரனுக்கு இது பிடிக்கவில்லை. இந்த சிலையை எப்படியாகிலும் அழிப்பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு நாள் இரவிலும் தனியாக வந்து ஒரு உளியால் சிலையின் அடிப்பாகத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினான். யாரும் அறியாமல் அந்த சிலையைத் தள்ளிவிட்டு உடைப்பதே அவன் திட்டம். இப்படியிருக்க ஒருநாள் இரவில் இவன் சிலையின் அடிப்பாகத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது சிலை திடீரென கவிழ்ந்து அவன் மேல் விழுந்தது. அவன் அவ்விடத்திலேயே இறந்தான். பிறருக்கு நற்காரியங்கள் நடக்கும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவனே கிறிஸ்துவின் உண்மையான சீடனாவான். அதைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்கள் நற்பெயரையும், நல் வாழ்வையும் அழிக்கத் தீர்மானிக்கிறவன் முதலாவது அழிவைக் காண்பான். பொறாமை கொள்பவனையே அழிக்கும். லூசிபர் பொறாமை கொண்டான். காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூபாக இருந்தவன் சாத்தானாக, பிசாசாக மாறினான். மொர்தேகாயை அழித்து விடவேண்டுமென அவனுக்காக பெரிய தூக்குமரத்தை உருவாக்கின ஆமான் அதே தூக்கு மரத்தில் தூக்கில் போடப்பட்டான். தானியேலை சிங்கக் கெபியில் போடத் தூண்டின யாவரும் குடும்பத்தோடு சிங்கக் கெபியில் போடப்பட்டனர். எப்போதுமே குழிவெட்ட நினையாதிருங்கள் படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். பிரசங்கி 10:8