ஒரு சமயம் ஒரு வாலிபன் வயது முதிர்ந்த ஒரு பரிசுத்தவானிடம் சென்று, தான் அநேக வேளைகளில் பொறுமையை இழப்பதால்... அவர் தனக்காக ஜெபிக்க வேண்டுமென்று அவரிடம் கேட்டான். ""நான் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாகப் பொறுமையுடன் இருக்க வேண்டுமென்று நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா?'' என்று அவன் கேட்டான், அந்த வயோதிபர் அதற்குச் சம்மதித்தார். அவர்களிருவரும் முழங்காற்படியிட்டனர். அந்த தேவ மனிதர் ஜெபிக்க ஆரம்பித்தார்; ""கர்த்தாவே, காலையில் இந்த வாலிபனுக்கு உபத்திரவத்தை அனுப்பும். மதிய வேளையில் இவனுக்கு உபத்திரவத்தை அனுப்பும்'', என்று அவர் ஜெபித்தார். அந்த வலிபன் அவரை மெதுவாக இடித்து, ""இல்லை, இல்லை பொறுமையை'', என்று கூறினார். ஆனால் அந்த வயோதிபர், ""உபத்திரவம் மட்டுமே பொறுமையை உண்டாக்கும்'', என்று கூறினார். நீ பொறுமையைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால், உபத்திரவத்தை அனுபவிக்க வேண்டும். நீ வெற்றியைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால் உனக்குப் போராட்டங்கள் இருக்கவேண்டும். யாராவது ஒருவர், நான் போராடாமல் வெற்றி பெற்றேன் என்று கூறுவது மதியீனமான செயலாக இருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் போர்க்களத்திற்குள் பிரவேசிப்பதற்கு நீ ஆயத்தமாக இருக்க வேண்டும். அவர், ஒவ்வொரு நாளுக்குமுரிய பாடங்களை உனக்குக் கற்றுத் தருவார். ஆனால் கிரயத்தைச் செலுத்துவதற்கு நீ ஆயத்தமாக இருக்கவேண்டுமென்று கூறி, நான் உன்னை எச்சரிக்கிறேன். வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களில் கூட, கிரயத்தைச் செலுத்தாமல், வெற்றியை அனுபவித்து மகிழ முடியாது. சிலுவையிலறையப்பட்டிருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே, சிலுவையிலறையுண்ட கர்த்தருடன் ஐக்கியமாக இருக்க முடியும். கல்வாரியின் வழியாகத்தான் கிறிஸ்து ஓர் அற்புதமான வெற்றியைப் பெற்றார். சிலுவையின் வழியாக மட்டுமே நீயும், நானும் வெற்றியின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க முடியும். உனக்கு பொறுமை வேண்டுமென்றால், அங்கு உபத்திரவம் இருக்க வேண்டும். உனக்கு வெற்றி வேண்டுமானால், அங்கு போராட்டம் இருக்க வேண்டும். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்''. (2 கொரி 2:14)