வேதம் வாசித்தால் தூக்கம் வருதா| Tamil Christian Message

மூதாட்டி ஒருநாள் தன் பிரசங்கியாருடைய வீட்டிற்குச் சென்று கதவைத்தட்டினார். பிரசங்கியார் வெளியே வந்த உடன் "ஐயா! எனக்கு வெகு நாட்களாய் தூக்கமே வருவதில்லை; தாங்கள் ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தால் போதும் எனக்கு உடனே தூக்கம் வந்து விடும்" என்று கூறினாராம். பிரசங்கியாரின் உற்சாகம் இல்லாத பிரசங்கத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக சொல்லப்பட்ட கதை என்றாலும், இதில் உண்மையும் உண்டு. "அவரே தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்" (சங் 127:3). மருத்துவர் ஒருவரிடம் எனக்கு தூக்கம் வருவதில்லை, மருந்து கொடுங்கள் என்ற நோயாளிக்கு, நீ போய் நன்றாக வேதம் வாசி அப்போது தூக்கம் வரும்" என்றாராம், ஒரு மருத்துவர். வேதம் வாசிக்கும்போதும், செய்தி கேட்கும் போதும், ஜெபம் செய்யும் போதும் வருகிற தூக்கம் பிசாசு கொண்டு வந்தாலும் உண்மையிலே இதை செய்கிறவர்களுக்கும் நித்திரை உண்டு; அதை ஆண்டவர் கொடுக்கிறார். தூக்கம் இல்லை என்று கூறுவது அதிகமாகிக்கொண்டே வருகிறது. சிலர் மாத்திரைகளுக்கும் சிலர் மதுபானத்திற்கும் அடிமைகளாகி விடுகின்றனர். "நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அழைக்கும் ஆண்டவரின் அழைப்புக்கு ஒருவன் செவிகொடுத்தால் நிச்சயமாய் அவனுக்கு இளைப்பாறுதல் உண்டு. அதாவது தூக்கம் உண்டு . தானியேலைப் பார்த்து ஆண்டவர் "எனக்கு பிரியமானவன்" என்று அழைத்தார். பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் என்றால், தானியேலைப் போன்ற வாழ்க்கை வாழவேண்டும் என்று கூறலாம் அல்லவா? நேபுகாத்நேச்சார், பெல்சாத்சார் போன்றவர்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். ஆனால் தானியேல் தன் நண்பர்களுடன் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டான் என்று வாசிக்கவில்லையே! தூக்கத்துக்கு நல்ல மருந்து ஆண்டவருக்கு பிரியமாய் வாழ்வதுதான். "நீ படுத்துக்கொள்ளும் போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்" நீதி 3:24

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create