சிசிலி நாட்டில் வேதத்தின் சிறு பகுதிகளை புத்தகங்களாக விற்று வந்த ஒரு மனிதன் காட்டுப் பகுதி வழியாக நடந்து சென்றபோது திருடர்கள் அவனைச் சந்தித்தார்கள். அவனிடமிருந்த பணம் முழுவதும் திருடின பின்பு, அவன் வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் எரித்து விடும்படி கட்டளையிட்டனர். நெருப்பு ஏற்றப்பட்டது. அவன் ஒவ்வொரு புத்தகமாக நெருப்பினுள் போடுவதற்கு முன்பாக அதன் ஒரு பகுதியைச் சத்தமாக வாசிக்க உத்தரவு கேட்டான். திருடர் கூட்டத் தலைவன் உத்தரவு கொடுத்தபடியால் முதலாவதாக சங்கீத புத்தகத்தை எடுத்து 23ம் சங்கீதத்தை வாசித்தான். நெருப்பினுள் போடுவதற்கு முன்பு திருடர் தலைவன் அவனைப் பார்த்து., "அது ஒரு நல்ல புத்தகமாகத் தெரிகிறது; அதை எரிக்க வேண்டாம்; என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறி அதை வாங்கிக் கொண்டான். பின்பு மத்தேயுவிலிருந்து மலைப்பிரசங்கத்தை வாசித்தான். அதையும் திருடர் தலைவன் நல்ல புத்தகம் என்று கூறி வாங்கிக் கொண்டான். பின்பு 1 கொரிந்தியர்-13ம் அதிகாரத்தை வாசித்தான். அதையும் வாங்கினான். லூக்கா புத்தகத்திலிருந்து நல்ல சமாரியன் கதையை வாசித்தான். அந்த புத்தகத்தையும் திருடர் தலைவன் வாங்கினான். இப்படியாக வாசிக்கப்பட்ட புத்தகமெல்லாம் அவன் வாங்கினபடியால் ஒரு புத்தகமும் எரிக்கப்படவில்லை; பின்னர் திருடர்கள் போய்விட்டனர். அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த புத்தக ஊழியன் அந்தத் திருடனை சந்தித்தான். ஆனால் அவன் இப்போது திருடனாக இல்லை; அபிஷேகம் பெற்ற ஒரு தேவ ஊழியக்காரனாக இருந்தான். அவன் பெற்றுச் சென்ற புத்தகங்களை வாசித்தபோது அவன் மனம் மாறியது; தேவனை ஏற்றுக் கொண்டான். வேத வசனங்களிலே மனதை மாற்றும் வல்லமை இருக்கிறது. நீங்களும் தியானியுங்கள் உங்கள் வாழ்க்கையிலும் பெரும் மாற்றங்கள் உண்டாகும் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஆசீர்வாதம் பெருகும், முயன்று பாருங்கள். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருக்கிறது'' எபி 4:12