தவறான செய்தியைப் பரப்பாதீர்| Tamil Christian Message

ஒரு சகோதரி தன் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒருவரைக் குறித்து தவறான ஒரு செய்தியைப் பரப்பிவிட்டார்கள். ஒரு சில நாட்களுக்குள் அவர்கள் வாழ்ந்த ஊரிலுள்ள எல்லாருமே இந்த துர்ச் செய்தியை அறிந்துவிட்டார்கள். அது அந்த மனிதரை மிகவும் பாதித்தது. சில நாட்கள் கழித்து அந்த செய்தியைப் பரப்பின சகோதரி தன் பிழையை உணர்ந்தார்கள். ஆனால் என்ன செய்வதென்று புரியவில்லை. மிகவும் மனம் வருந்தி அவ்வூரில் வாழ்ந்த ஒரு துறவியிடம் சென்று, "நான் ஒரு தவறான செய்தியை வெளியில் கூறிவிட்டேன். இப்போது அந்த மனிதரைக் குறித்து ஊரே தவறாக நினைத்திருக்கிறது.இதைச் சரியாக்க நான் என்ன செய்யவேண்டும்" எனக்கேட்டார்கள். துறவி அவளிடம் "நீ சந்தையில் ஒரு புறாவை வாங்கி அதன் இறகுகளைப் பிய்த்து, வழியில் ஒவ்வொன்றாக வீசிவிட்டுச் செல் நாளை என்னை வந்துபார்" என்று கூறினார். அவளும் அதைப்போல் செய்துவிட்டு மறுநாள் வந்தாள். துறவி அவளிடம் "இப்போது நீ போய் வழியில் வீசின இறகுகளைப் பொறுக்கிவா" என்றார். அவள் சென்று பார்த்தபோது யாவும் காற்றால் அடிக்கப்பட்டு சென்று விட்டன. ஒரு சில இறகுகளே கிடைத்தன. அவள் துறவிடம் வந்தபோது அவர் "நாம் பேசுகின்ற வார்த்தைகளும் இப்படியே பேசின பின்பு அவற்றை சேர்த்துவிட நாமே நினைத்தாலும் முடியாது" என்று கூறி அனுப்பினார். பிறரைக்குறித்து அவதூறான, தேவையற்ற உண்மையில்லாத, வம்பு வார்த்தைகளைப் பேசுதல் ஒரு கிறிஸ்தவனுக்குத் தகுதியானதல்ல. இவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையையே அழித்துவிடும். வம்பு வார்த்தைகளை நாம் பேசின பின்பு அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க நாமே நினைத்தால் கூட முடியாது. உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டு விடுங்கள். கொலோசெயர் 3:8

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create