இவ்வுலகில் பிறந்திருக்கிற எல்லா மனிதருக்கும் ஏதாகிலும் ஒருவகையில் கவலைகள் உண்டு. இதில் கிறிஸ்தவர்கள் விதிவிலக்கல்ல. கவலை என்பத ஒருவித அச்சம். தேர்வு எழுதும் மாணவன் தான் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற கவலையில் இருக்கிறான். திருமணம் ஆகாதவன் நல்ல மனைவி வாய்ப்பாளோ என்கின்ற பயத்தில் இருக்கிறான். பார்த்துக் கொண்டிருக்கின்ற பதவி பறிபோய்விடுமோ என்று அரசியல்வாதிக்கு பயம்; அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வோம் என்று ஏழை அச்சத்தில் வாழ்கிறான். இருக்கின்ற பொருளை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று பணக்காரன் பயத்திலிருக்கிறான். தேவன் நம்மைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்றுரைக்கிறார். "ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்" மத்தேயு 6:34. தேவன் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். நமது தேவைகளைக் குறித்து அவர் அதிகமாய் அறிந்திருக்கிறார். நமது கவலைகளையும், தேவைகளையும் தேவனிடம் ஒப்படைக்கும்போது அவர் நம் பாரத்தை ஏற்றுக்கொள்கிறார். இயேசு கிறிஸ்து ஒரு சுமைதாங்கியாக நம் பாரங்களையெல்லாம் தாங்கி கொள்வார். அநேக வேளையில் நம் பாரத்தை நாமே சுமந்து கொண்டு திரிகிறோம். தேவையற்ற கவலைகளை மனதில் சுமந்துகொண்டு வாழ்க்கையை கசப்பான அனுபவமாக மாற்றிக்கொள்கிறோம். இயேசு நம் கவலைகளை தன்னிடமாய் எடுத்துக் கொண்டு நமக்கு விடுதலையளிக்க வல்லவராய் இருக்கிறார்.