இன்றைய உலகில் பல ஓட்டங்களை நாம் காணலாம். பல காரணங்கள் அதற்கு உண்டு. உடற்பயிற்சிக்காக ஓடுவோரும், உடல் எடையை குறைக்க ஓடுவோரும் உண்டு. பந்தயங்களில் ஓடுவோரும் உண்டு. இன்னும் சிலர் ஆபத்து நேரத்தில் தங்கள் உயிரைக்காக்கும்படி ஓடுகிறார்கள். இப்படி.. ஓட்டம் பலவிதமே. பரிசுத்த பவுல் எழுதும் போது பந்தய சாலை ஓட்டத்தை குறிப்பிடுகிறார். பவுல் வாழ்ந்த நாட்களில் ஓட்டப்பந்தயத்தில் பங்கு கொள்பவர்கள் பயிற்சியில் ஈடுபடும் பொழுது தங்கள் உடல்களில் பாரமான கற்களைக் கட்டிக் கொண்டு ஓடிப்பழகுவார்களாம். அவ்விதப்பயிற்சிக்குப்பின், நிஜ ஓட்டப்பந்தயத்தில் பங்கு கொள்ளும் போது பாரமான அக்கற்களை அகற்றிவிட்டு ஓடுவார்கள். இவ்வித பயிற்சி வேகமாக ஓட உதவி செய்யும். ஆனால் நாம் ஓடும் விசுவாச வாழ்வின் ஓட்டமோ, பயிற்சி ஓட்டம் அல்ல. நிஜ ஓட்டம், பாரத்தை சுமந்து கொண்டு ஓடினால், ஓட்டம் தடைபடும், பாரத்தைக் கொண்டு வருவது எது? "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும், வெறியினாலும், கவலையினாலும் பாரமடையாதபடிக்கு..." லூக்கா-21:24. இவை ஒரு மனிதனை பாரப்படுத்தி அழுத்தும் போது ஓட்டம் தடைபடுமே. தடுக்கி விழ நேரிடுமே. ஆகவே தான் கர்த்தர் (இயேசு), பாரத்தை என்னிடம் தந்து விடு. நான் ஏற்றுக் கொள்கிறேன் நீ வெற்றியாய் ஓடு" என்கிறார். பாரங்களை அவரிடம் கொடுக்காமல் நீங்களே சுமந்து கொண்டு ஓடினால் தடுமாற்றம் தான். "ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு.. இயேசுவை நோக்கி.. ஓடக்கடவோம். எபி 12:1. ஆம்; பாரமானவற்றைத் தள்ளிவிட்டு ஓட வேண்டும்.