நைட்டிங்கேல் பறவை மிக இனிமையாகப் பாடக்கூடியது. இரவு நேரத்தில் அது பாடும் இனிய பாடல் மனதைக் குளிர வைத்து கர்த்தரைத் துதிக்கும்படி ஏவி எழுப்பும். ஒரு இரவில் நைட்டிங்கேல் பறவை மரத்தின் கிளையில் அமைதியாக அமர்ந்திருந்தது. அந்தப் பக்கமாய் வந்த ஒரு குருவி நைட்டிங்கேலைப் பார்த்து, "நீ ஏன் பாடவில்லை, உன் குரலுக்காக இந்தக்காடு முழுவதுமே ஏங்கிப் பார்த்துக் காத்திருக்கிறதே!" என்றது. அதற்கு முறுமுறுத்த நைட்டிங்கேல் சொன்னது நான் எப்படிப் பாடுவேன்? இந்த தவளைகள் அருவருப்பாய் அலறும் சத்தம் என் செவிப்பறையைக் கிழிக்கிறதே" என்றது. அதைக்கேட்ட அந்தக்குருவி விடவில்லை! நைட்டிங்கேலே நீ பாடாமலிருப்பதால் தான் அந்த தவளையின் குரல் காதில் விழுகிறது. நீ பாட ஆரம்பித்தால் உன் தெய்வீகக் குரலினால் மற்ற எல்லா சத்தங்களும் அடங்கிப் போகும்" என்று கூறி நைட்டிங்கேலைப் பாடவைத்தது. துதிக்கும் போதுதான், முறுமுறுக்கச் செய்யும் எல்லாம் விடைபெற ஆரம்பிக்கும். துதிக்காமலிருந்தால் உங்களைச் சுற்றியிருக்கிற எரிச்சலின் சத்தம், சண்டையின் சத்தம், முறுமுறுப்பின் சத்தம் எல்லாம் மிக பெரியதாய் கேட்கும் என்பதில் சந்தேகமில்லை. சீன தேசத்தில் ஒரு மிஷனெரி பணியாற்றினார். அந்த மிஷனெரியின் வாழ்வும் ஊழியமும் தோல்வியாகவே இருந்தது. நோயும், வியாதியும், கவலையும் அவரை வாட்டி வதைத்தன. மனச்சோர்வை மேற்கொள்வதற்காக பல நாட்கள் இரவும் பகலும் ஜெபம்பண்ணிப் பார்த்தார். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் விடுதலை இல்லை. ஆகவே தன் மிஷனெரிப் பணி யை விட்டுவிட்டு தன் தேசத்திற்கு திரும்ப தீர்மானித்தாராம். அன்று ஒரு வீட்டில், "துதியை முயற்சி செய்து பாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். அதைப் பார்த்து கர்த்தர் தனக்கு கொடுத்த செய்தியாகவே எண்ணி உடனே உற்சாகத்தோடு துதிக்க ஆரம்பித்தாராம். துதிக்க துதிக்க இருளின் ஆதிக்கம் மறைந்தது. புது உற்சாகம் வந்தது. சோர்வும் நீங்கியது.வாழ்க்கையில் பெரிய ஆசீர்வாதம் பிரவேசிக்க ஆரம்பித்தது. ஊழியத்தில் வல்லமை விளங்கிற்று. அன்புக்குரியவர்களே! அதிகாலை ஜெப வேளைய துதிவேளையாய் மாற்றிப்பாருங்களேன்! அந்நாள் முழுவதற்குமான் புத்துணர்ச்சி பெறுவதோடு சந்தோஷமும், மகிழ்ச்சியும் உங்களை அரவணைத்துக்கொள்ளும். இனிய அனுபவத்திற்கு தயாராகி விட்டீர்களா? துதியை முயற்சித்துப் பாருங்களேன்.