உண்மைய்ப் பற்றிக்கொள்| Tamil Christian Message

"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.'' (நீதி. 12:22). தேவமனிதன் ஒருவர் ஒருநாள் இரவு ஒரு கனவு கண்டார். அதுவரை தன்னோடு குடியிருந்த "பணம்' தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதைக் கண்டார். "பணம்' தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட அவர் ஓடோடிச் சென்று பணத்தை நிறுத்தி "நீ ஏன் என்னைவிட்டுப் போகிறாய்'' "நீ என்னோடிரு'' என்று கேட்டுக் கொண்டார். நான் எங்கும் நிலையாக இருப்பதில்லை. சிலகாலம் ஓரிடத்தில் இருப்பேன். பின்னர் வேறு இடத்திற்குப் போய்விடுவேன். ஆகவேதான் என்னை "நிலையற்ற ஐசுவரியம்'' (1 தீமோ. 6:17) என்று கூறுவார்கள். "என்னைத் தடுத்து நிறுத்தாதே'' என்றது "பணம்". "சரி, அப்படியானால் போ'' என்று அந்த தேவ மனிதர் விட்டுவிட்டார். சிறிது நேரத்தில், பணத்தை அடுத்து அதுவரைத் தன்னோடு இருந்த "மரியாதை" வீட்டை விட்டு வெளியேறுதை அந்த மனிதர் கண்டார். மரியாதையை தடுத்து நிறுத்தி "என்னை விட்டுப் போகாதே'' என்று கெஞ்சினார். "பணம்" இல்லாத இடத்தில் எனக்கு இடமில்லை. "பணம்' இருந்தால்தான் "மரியாதை' உண்டு. "நான் தனியே இருக்க முடியாது'' என்று கூறி போய்விட்டது. "சரி அப்படியானால் போ'' என்று அதை தேவ மனிதர் விட்டுவிட்டார். அதை அடுத்து தன்னோடு வாழ்ந்த "உண்மை' தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஓடோடிச் சென்று "உண்மையின்" கால்களை இறுகப்பற்றிக் கொண்டார். "என்ன ஆனாலும் சரி, "உண்மையே" உன்னை விடமாட்டேன்'' என்று பிடித்த பிடியை விடவில்லை. "பணமும், மரியாதையும் இல்லத இடத்தில் நான் தனித்து இருக்க முடியாது. பணமில்லாமல் "தரித்திரம்" உள்ளே வரும்போது அதை தொடர்ந்து "பொய்" வரும். அதைத் தொடர்ந்து "திருட்டு" வரும் (நீதி 30:9). ஆகவே "நான் விடவே மாட்டேன்'' என்று என்றது "உண்மை". "இல்லை உன்னை மாத்திரம் நான் விடவே மாட்டேன்'' என்று "உண்மையை' இறுகப் பற்றிக் கொண்டார். "உண்மை' வேறுவழியின்றி தேவமனிதரின் வீட்டில் தங்கிவிட்டது. தேவ மனிதருக்கு பெரிய சந்தோஷம். "உண்மை" தன்னோடிருந்தால் அதுவே போதும் என்று எண்ணினார். சிறிது நேரம் கழித்து, வெளியேறிச் சென்ற "பணம்' திரும்பி வந்தது. தேவ மனிதர் "நீ ஏன் திரும்ப வந்துவிட்டாய்'' என்று கேட்டார். உண்மை இல்லாத இடத்தில் இருக்க எனக்கு மனதில்லை. ஆகவே தான் திரும்பிவந்துவிட்டேன்'' என்றது. தேவமனிதருக்கு மிகுந்த ஆச்சரியம். ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மரியாதையும் திரும்பி வந்துவிட்டது. பணம் இருக்குமிட்த்திலேதான் நானும் இருக்க விரும்புகிறேன் என்றது. தேவமனிதன் அதையும் ஏற்றுக்கொண்டார். உண்மையை விடாமல் பற்றிக் கொண்டதின் விளைவாக தன்னை விட்டுப்பிரிந்து சென்ற பணமும் மரியாதையும் தானாகத் திரும்பி வந்தன. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்'' (நீதி. 28:20)

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create