அமெரிக்க சுதந்திரப்போரை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த நேரமது. அவர் ஒரு தடவை மாறுவேடமணிந்து தன் படையினரின் வேலைகளைக் கண்காணித்தார். ஒரு ஆற்றின் குறுக்காக பாலம் போடுவதற்காக பெரிய மரத்துண்டு ஒன்றை வீரர்கள் தூக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தலைவனாக இருந்த ஒருவர் இப்படித்தூக்க வேண்டும், அப்படித் தூக்க வேண்டும் என்று அவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். ஆனால் தூக்க முடியாமல் தவித்த அவர்களுக்கு உதவி செய்யவில்லை. இதைக்கண்ட வாஷிங்டன் அவர்களோடு சேர்ந்து மரத்தைத் தூக்க உதவி செய்தார். வேலை முடிந்தவுடன் எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்த தலைவனிடம் சென்று " நீங்களும் உதவி செய்திருந்தால் வேலை எளிதாக முடிந்திருக்குமே'' என்றார். "நான் தலைவர்; நான் அப்படியெல்லாம் செய்யக்கூடாது'' என்றான் அவன். வாஷிங்டன் அமைதியாகச் சொன்னார். "இனி ஏதாவது இப்படிப்பட்ட வேலைகள் இருந்தால் உன் பெரிய படைத்தலைவரான வாஷிங்டனை கூப்பிடு. நான் உடனே வருவேன் என்றார். அவர் வாஷிங்டன் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியோடு நின்றான் தலைவன். பெரிய தலைவராக இருந்தாலும் சிறியோரோடு சேர்ந்து பணிபுரிந்த அவரது தாழ்மை என்றும் உயர்ந்து நிற்கிறது. இயேசு சொல்கிறார், உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவர் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கடவன். (மத்தேயு 20-27)