ஒரு சன்மார்க்கக் கிறிஸ்தவன் இருந்தான். அவன் உலகோர் பார்வையில் குற்றமில்லாமல் வாழ்ந்தான். ஆனால் அவன் தன் உள்ளத்திற்குள் குடிகொண்டிருந்த பற்பல பாவங்களை மூடிமறைத்து வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவன் மரித்து மறுமைக்குள் சென்றான். அப்பொழுது பிசாசு அவனை அணுகி. ""நீ என்னுடையவன், நரகத்திற்குப் போவோம் வா என்றான்''. அப்போது அவன் ஆத்திரம் கொண்டு நான் உன்னுடையவன் அல்ல ; "நான் ஒரு கிறிஸ்தவன்; நான் மோட்சத்திற்குப் போக வேண்டும்'' என்று மறுத்துரைத்தான். இவர்களின் தர்க்கத்தைக் கேட்டு நின்ற ஒரு தேவதூதன், கிறிஸ்தவனை சொர்க்கத்திற்குக் கொண்டு போனான். அவன் மிகக் களிப்புடன் மோட்சத்திற்குள் புகுந்தான். மோட்சலோக அழகைக் கண்டு வியந்தான். ஏராளமான தேவதூதர்களைக் கண்டு மகிழ்ந்தான். அவர்கள் பரிசுத்த அலங்காரத்துடன் காணப்பட்டார்கள். எங்கும் ஒளிமயமாகவே இருந்தது. இயேசுவையும் கண்டு தரிசித்தான். மாசு, மறு எவ்வளவேனும் அங்கு காணப்படவில்லை. இவைகளைப் பார்த்தறிந்து பின் தன்னையே உற்று நோக்கினான். பின்பு அவன் அங்கு நிற்க முடியாமல் எங்காவது ஓடி ஒளித்துக் கொள்ள எண்ணி ஓட்டம் பிடித்தான். அவனுக்குள் ஒளிந்திருந்த பாவங்களின் காட்சியே அவனை ஓடச் செய்தது. "எனக்கு இங்கு நிற்க இயலாது. நான் நரகத்திற்குச் செல்ல உத்தரவு வேண்டும்'' என்று சத்தமிட்டுக் கதறினான். நரகத்திற்குப் போக யார் அவனைக் கட்டாயாப் படுத்தினார்கள்? அவனது பாவமே அவனை சொர்க்கத்திலிருந்து புறம்பே தள்ளியது. அப்படி நேராதிருக்க பூமியில் வாழும் காலத்திலேயே நம்மை நாமே பரிசோதித்து அறிவோம். இரட்சிப்பின் பேரின்பம் பெறுவோம்