ஒரு ஊரில் ஏழை பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு வயதில் ஜெனி என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஏழைத் தாயான அவள், கல்குவாரி ஒன்றில் கல் உடைக்கும் சித்தாளாகப் பணிபுரிந்து வந்தாள். அப்படி ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் போது ஜெனியையும் துக்கிச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் காலை சுமார் மணி 10 இருக்கும். தாய் ஓரிடத்தில் கற்களை உடைத்துக் கொண்டிருக்க, ஜெனி சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், அருகில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் கூக்குரலிட்டனர் - "ஜெனி! அங்கே போகாதே! ஓடாதே! நில்! அங்கு வெடி இருக்கிறது... வெடித்து விடும்''. திடுக்கிட்ட அந்த தாய் அலறியபடி ஜெனியிடம் ஓடினாள். ஆனால் ஜெனியோ, தாய் தன்னிடம் விளையாடுகிறாள் என்று எண்ணி, இன்னும் வேகமாய் ஓடினாள். பெரும் கற்பாறைகளை உடைப்பதற்காக, அப்பாறைகளில் வெடிகளை பொருத்தி, அதனை வெடிக்கச் செய்து உடைப்பது வழக்கம். அன்றும் அப்படியே பொருத்தியிருந்தனர். அதை அறியாத ஜெனி அந்த பாறையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். அம்மா தன்னோடு ஓடி விளையாடுகிறார் என்பது அவளுடைய நினைப்பு, பாவம் அந்த ஏழைத்தாய் தவித்து போனாள். செய்வதறியாது ஒரு நொடி திகைத்து நின்றாள். சற்றே யோசித்த பின்னர் ஓடிக் கொண்டிருந்த ஜெனியைப் பார்த்து தன் இரு கைகளையும் அகல விரித்து, '"ஜெனி, ஜெனி'' என்று கூப்பிட்டாள். திரும்பி பார்த்த ஜெனி, தன் தாயின் நீட்டப்பட்ட கரத்தைப் பார்த்து ஓட்டமாய் ஓடி வந்து அடைக்கலம் புகுந்தாள். தாய் தன் பிள்ளையை அன்போடு அனைத்துக் கொண்டு அதன் ஜீவனைத் காத்தாள். ஆம்! அன்பு நண்பர்களே நம் இயேசப்பாவின் அன்பு ஓர் உலகத் தாயின் அன்பைக் காட்டிலும் பெரியது. பிரச்சனைகளை நோக்கி ஓடும் வேளையில் தன் அன்பு கரத்தினுள் வந்து விடு மகளே! மகனே! என்று அவர் அழைக்கும் குரலுக்கு உன் செவியை சாய் " அவரே நமக்கு உயர்ந்த அடைக்கலாமனவர்.'' "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், அபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்''. சங் 46:1