ஒருநாள், மரணதூதன் அன்று மரிக்கவேண்டிவர்களின் பட்டியலோடு வந்தான். அந்த லிஸ்டில் முதலாவது நபராய் இருந்தவனிடம் வந்து இந்தாப்பா... இன்று உன்னுடைய மரணநாள். லிஸ்டில் உம்பேருதான் முதல்ல இருக்கு...எனவே புறப்படு என்றான். அந்த மனிதனோ வரமுடியாது... நான் இன்னும் வாழவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். மரணதூதன் அப்படியெல்லாம் நீ நினைத்தபடி இவ்வுலகில் இருந்துவிடமுடியாது. நேரம் வந்தால் வந்தது வந்ததுதான் என்றான். காரியம் நடக்காது என்று அறிந்து மரிக்கவேண்டிய அந்த மனிதன், சரி வர்றேன்... அதற்கு முன்னாலே நல்ல ஒரு டீ குடிச்சிட்டுப் புறப்படுவோம் என்றான். மரண தூதனும் சம்மதித்தான். இருவரும் 'டீ' குடித்தார்கள். சிறிது நேரத்தில் மரணதூதன் அயர்ந்து தூங்கிவிட்டான். காரணம், மரண தூதனுக்கான டீ-ல் இந்த ஆசாமி தூக்க மாத்திரையை கலந்துவிட்டதுதான். மரண தூதன் தூங்குகையில் இந்த ஆசாமி லிஸ்டில் முதலில் இருந்த தனது பெயரை அழித்துவிட்டு லிஸ்டில் கடைசியில் கொண்டுபோய் எழுதிவைத்துவிட்டான், சாகிறதுதான் சாகிறோம் சற்று பிந்திச் சாவோமே எனும் நினைப்புடன். தூக்கம் தெளிந்து எழும்பிய மரணதூதன், "நண்பனே! உமது டீ மிக மிக அருமை... அதில் கிறங்கி அப்படியே தூங்கிவிட்டேன் பார்த்தீரா? உமது உபசரிப்புக்கு மிக்க நன்றி, அதற்கு ஈடாக, நான் உமக்கு ஒரு உதவி செய்யப்போகிறேன்... அதாவது லிஸ்டில் முதலில் இருந்து ஆரம்பிக்காமல் கீழிலிருந்து ஆரம்பிக்கப்போகிறேன்' என்றான். ஏமாற்றிய ஆசாமிக்கு, தலையில் இடி விழுந்தாற்போல் சப்தநாடியும் ஒடுங்கிப்போயிற்று. (அது ஒரு கதைதான்...! ஆனால் பாடமுண்டு.) வஞ்சனை, பொய்ச்சாட்சிகள், மாய்மாலம், நடிப்பு, நாடகம், பொய்யை உண்மையாய் நிலைநிறுத்த முயற்சித்தல் போன்ற எதுவும் தேவசமூகத்தில் எடுபடாது. உண்மையே என்றும் வெல்லும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். நீதிமொழிகள் 28:20