வேதாகமம் ஒரு தெய்வீக நூலகம். வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தங்களும் உள்ளது. முதன் முதலாக வேதாகமத்தைத் "தெய்வீக நூலகம்' ( DIVINE LIBRARY ) என்று அழைத்தவர் ஜெரோம் என்பவர். தேவ மனிதர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு இந்த வேதாகமத்தை எழுதியுள்ளார்கள். (11 பேதுரு 1:21). இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாம் விசுவாசிக்கும் படியாகவும் விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நாம் நித்திய ஜீவனை அடையும்படி இவைகள் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 ஆசிரியர்களைக் கொண்டு முழு வேதாகமத்தை எழுதியுள்ளார்கள். மன்னர்கள், மதகுருக்கள், மருத்துவர்கள், மீனவர்கள், தீர்க்க தரிசிகள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள், எகிப்தியர்கள், பாபிலோனிய கலையிலும், யூத ரபிகளிடமும் கல்வி கற்றுத் தேர்ந்த பலதரப்பட்ட மனிதர்கள், முழு வேதாகமத்தையும் எழுதுவதற்கு பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப் பட்டுள்ளார்கள். பல மனிதர்கள் பயன்படுத்தப்பட்டாலும், கால இடைவெளி அதிகமிருப்பினும் வேதாகமத்தின் மையக் கருத்து மாற்றம் பெறாமல், கருத்து ஒரே மாதிரியாகவும் பிணைந்திருப்பது மிக ஆச்சரியமே. பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களுக்கும் புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. சைபீரியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ரஷ்ய மனிதன் ஒருவன் புதிய ஏற்பாடு புத்தகத்தை வாசித்து முடித்தான். உடனே அவன் அதோடு தொடர்புடைய அடுத்த புத்தகம் வேண்டுமே என்று பழைய ஏற்பாடு புத்தகத்தைத் தேட ஆரம்பித்தான். அவனுடைய முழு வேதாகமமும் கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் முன்னதாக அறிவிக்கப்பட்ட அநேக காரியங்கள் பலநூறு ஆண்டுகள் கழித்து புதிய ஏற்பாட்டில் நிறைவேறியதாக வாசித்தபோது வேதாகமத்தில் சொல்லப்பட்ட தேவனை விசுவாசித்தான்.