ஒரு முறை ஒரு விஞ்ஞானி செடிகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று செய்தாராம். ஆராய்ச்சிக்காக 2 செடிகளை வளர்த்தாராம். அவை சிறியதாய் இருக்கும் போது ஒவ்வொரு முறை தண்ணீர் ஊற்றும் போதும் அதன் அருகில் சென்று முதல் செடியிடம்,"என் அன்பு செடியே, நீ நன்கு வளர்வாய். நீ பூத்து, கனி கொடுப்பாய், செழித்திருப்பாய். பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் இருப்பாய். சீக்கிரம் வளருவாய்" என்றெல்லாம் மிக அன்புடன் அந்தசெடியிடம் பேசி தண்ணீர் ஊற்றுவாராம். இரண்டாம் செடியின் அருகில் வந்து அந்த செடியைப் பார்த்து, " நீ வளரமாட்டாய். உனக்கு தண்ணீர் ஊற்றுவதே வீண்தான். அப்படியே தப்பித்தவறி வளர்ந்தாலும் பூத்துவிடமாட்டாய். காய் கனியை உன்னில் காண முடியாது. சபிக்கப்பட்ட செடி." என்று கடினமாய் பேசி தண்ணீர் ஊற்றுவாராம். நாட்கள் கடந்தன. ஒரு சில மாதங்களும் சென்று போனாது . அப்போது செடியின் வளர்ச்சியை பார்க்கும்போது ஒரு உண்மையைக் கண்டுபிடித்தாராம் முதல் செடி நன்கு செழிப்பாய் வளர்ந்திருந்ததாம். பார்ப்பதற்கே குளிர்ச்சியாய், இனிமையாய், மனதிற்கு சந்தோஷமாய் இருந்ததாம். இரண்டாம் செடியை பார்க்கும் போது அது வாடி வதங்கி எப்பொழுது சாய்ந்து போகுமோ என்பது போல் பரிதாபமாய் இருந்ததாம். அவர் செடிகளைப் பார்த்து அனுதினமும் பேசியபடியே அந்த இரண்டு செடியின் வாழ்வும் இருந்ததாம். நண்பர்களே! இது இப்பொழுது நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று, நமது வேதமும் இதைத்தான் பல வருடங்களுக்கு முன்பே கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. ஆம், மரணமானாலும் ஜீவனானாலும் நம் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. வேறொரு மொழிபெயர்ப்பில் இதைப் பார்க்கும் போது "சாவும் வாழ்வும் நாவிலிருந்தே விளைகின்றன" என்றும் "வாழ்வதும் நாவாலே : சாவதும் நாவாலே" என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது இன்னும் தெளிவாய் இதன் அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறதல்லவா. " மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." - நீதி 18 : 21