மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடும் இரு நோயாளிகள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். ஜன்னலுக்கு அருகில் ஒருவனும், சற்றுத்தள்ளி இன்னொரு மூலையில் திரும்பிக்கூட பார்க்க முடியாத நிலையில் இன்னொருவர் என படுக்கையில் இருந்தனர். ஜன்னல் அருகில் படுத்திருக்கும் நோயாளியோ, எப்பொழுதும் தன் சக நோயாளிக்கு ஜன்னல் வழியே காணும் காட்சிகளை எல்லாம் விவரித்துக்கூறி மகிழ்விப்பாராம். திரும்பிப்பார்க்கவும் முடியாமல் படுத்திருக்கும் இந்நோயாளியோ அவர் சொல்வதையெல்லாம் கேட்டு அவற்றை தன் மனத்திரையில் கொண்டு வந்து இரசித்து மகிழ்வாராம். நாள் ஒன்று வந்தது. ஜன்னல் ஓர நோயாளி மரித்துப் போனார். உடனே அடுத்த நோயாளி தான் ஜன்னல் ஓரம் படுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியரும் அப்படியே செய்தனர். இத்தனை நாளும் மனத்திரையில் மட்டும் ரசித்த செயல்களைப் பார்க்கும்படி ஜன்னலை எட்டிப்பார்த்தார். வெளி உலகை மறைத்துக் கொண்டிருந்த பெரிய சுவர் ஒன்றைத் தவிர வேறொன்றையும் காணோம். விசாரித்தார். இறந்து போன நோயாளிக்கு கண் தெரியாது. உங்களை சந்தோஷப்படுத்தவே அவர் அப்படி விவரித்தார் எனப் பதில் வந்ததாம். சகோதரர்களே! மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் தான் அதிக சந்தோஷம் என்பது தெளிவாகிறதல்லவா. தனக்கானவற்றைக் குறித்துக் கவனமாயிருப்பது தேவையானதே. அதே சமயம் பிறனுக்கானவைகளையும் சிந்தித்து செயல்படுவது அவசியம் தான். அவற்றிலும் நாம் கவனமாய் இருக்க வேண்டும். பிறர் நலனில் அக்கறை கொள்ள தேவ கிருபையை நாடுவோம். கடிந்து கொள்ளப்படுவது நமது நன்மைக்காகவே என்பதை மறக்க வேண்டாம். குறைகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வோம். சுட்டிக்காட்டுவோரை நேசிப்போம். தவறுகளை திருத்திக் கொள்வோம். பிறர் தவறுகளையும் பண்புடனும், பக்குவத்துடனும் கூறி அவர்களைத் திருத்தம் உண்மை சிநேகிதராயிருப்போம். தேவாசீர்வாதம் பெறுவோம்! "அவனவன் தனக்கானவைகளையல்ல; பிறருக்கானவைகளையும் நோக்குவானாக'' பிலிப்பியர் 2:4.