இரண்டு வாலிபர்கள் ஓர் இடத்தில் சூதாடிக் கொண்டிருந்தார்கள். சூதாடுகிறவர்களுக்கு ரூ.500 அபராதம் என்பது அந்நாட்டுச்சட்டம் சர்க்கார் சேவகர் அவ்விருவரையும் கைது செய்தார். இருவரில் ஒருவன் சீமானின் பிள்ளை. மற்றவன் ஏழைத் தாயின் மகன். சீமானின் பிள்ளைக்காக ரூ.500 உடனே செலுத்தப்பட்டதால் அவன் சிறையிலிருந்து தப்பினான். ஏழைத் தாயின் மகனோ என்ன செய்வான்? ரூ.500 கொடுக்க அவனுக்கு சக்தியில்லாததால் சிறைச்சாலையிலேயே இருந்தான். இவனுடைய தாயோ தன் பிள்ளையை அங்கிருந்து விடுவிக்கப் பணம் சேர்க்கும் பொருட்டு காலை முதல் மாலைமட்டும் கடும்பாடுபட்டு கல் சுமந்து கூலிவேலை செய்து வந்தாள். அவள் கையின்மேல் ஒருநாள் கல் விழுந்து விரல் சிதைந்து, இரத்தம் சிந்தி கல் சுமந்துபோனாள். போகையில் மகன் கைதிக்கூடத்துப் பலகணிவழியாய் இதைக்கண்டு தாயை அழைத்தான். அழைத்து, 'அம்மா! உங்கள் கையில் ஏன் காயம்? விரலில் ஏன் இரத்தம்? என்று கேட்டான். தாயோ, 'உன்னை விடுவிக்கத்தான் நான் இவ்வாறு வருத்தப்படுகிறேன் என்று விவரித்துச் சொன்னாள். கொஞ்சக்காலத்துக்குள்ளே தாய் 500ரூ சேர்த்து மகனை விடுவித்தாள். பிறகு ஒருநாள் அந்த சீமானின் மகன் ஏழைத் தாயின் மகனை வழியில் கண்டு சூதாடக்கூப்பிட்டான். அவனோ, 'இது ஒருபோதும் முடியாது உனக்கு விடுதலே வருத்தமின்றி சுலபமாய் கிடைத்தது. நானோ என் தாயின் கடும் பிரயாசை, கூலிவேலை உடம்பில் காயம், இரத்தம் இவற்றால் மீட்கப்பட்டேன். ஆகையால் என் தாயை இத்தனை பாடுகளுக்குள்ளாக்கின சூதாட்டத்தை இனி எட்டியும் பாரேன்' என்றான்.