அம்மாவைக் காணவில்லை| Tamil Christian Message

ஒருமுறை ஒரு தாய் தன்னுடைய ஐந்து வயது மகளை பொருட்காட்சி பார்க்க அழைத்துச் சென்றார்கள். அங்கு கண்ட காட்சிகளால் சிறுமியுடைய கண்கள் விரிந்தன. ஒவ்வொரு கடையாக ஏறிப்பார்த்து பலூன்களையும், விளையாட்டுப் பொருட்களையும், மிட்டாய்களையும் வாங்கிக் கொண்டாள். அவ்வப்போது தாயின் கரத்தை விட்டுப் பிரிந்து செல்வதும், ஒரு சில நிமிடங்களுக்குள் ஓடி வந்து தாயின் கரத்தைப் பிடித்துக் கொள்வதுமாக விளையாடிக் கொண்டே சென்றாள். ஒரு தடவை தாயின் கையை விட்டுச் சென்றபோது தாய் ஏதோ வாங்குவதற்குகாகத் திரும்பினாள். சற்று நேரத்தில் மகளைக் காணாமல் அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினாள். அதிக நேரமாகியும் மகளைக் காணாமல் பொருட்காட்சியை நடத்தியவர்களிடம் ஓடினாள். அவர்களும் சேர்ந்து காணாமல் போன சிறுமியைத் தேடினார்கள். ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக ஒருவர் மகளைக் கண்டுபிடித்து தாயிடம் கொண்டு வந்தார். தாயைக் கண்டவுடன் சிறுமி ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டு அழுவாள் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். மாறாக அவள் வெகு எளிதாகத் தாயிடம் அம்மா நீ இத்தனை நேரம் எங்கே காணாமல் போய்விட்டாய் என்றாள். பொருட்காட்சிக் கூட்டத்தில் அவள் காணாமல் போனதை உணராமல் தாய்தான் காணாமல் போய்விட்டாள் என்று நினைத்தாள். எத்தனையோ தேவனுடைய பிள்ளைகள் பாவத்தில் விழுந்து, வெளியே வரமுடியாமல் இருப்பதை உணர்வதே இல்லை. இயேசு லூக்கா 15ல் சொன்ன காணாமல் போன வெள்ளிக் காசைப்போல இவர்கள் கிறிஸ்துவை விட்டு காணாமல் போயிருப்பதை உணர்வதே இல்லை. பரிசுத்த ஆவியானவர் கடிந்து கொண்டு, பாவத்தை உணர்த்தும் ஊழியத்துக்குத் தங்களை இவர்கள் ஒப்புக்கொடுப்பதும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் யாராகிலும் இந்த தியானத்தை இன்று வாசித்தால், பரிசுத்த ஆவியானவரின் கடிந்து கொள்ளும் சத்தத்துக்குச் செவி கொடுத்து இப்போதே தேவனிடம் வாருங்கள்.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create