ஒரு மாலையின் இருண்ட வேளையில் ஒரு பஸ் மலை உச்சியில் ஏறிக்கொண்டிருந்தது. மிகப்பயங்கரமான பள்ளத்தாக்கும் மிக உயரமான மலைகளும் உள்ள அந்தப் பாதையில் வளைந்தும் நெளிந்தும் பஸ் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே பயணிகளின் இருக்கையில் ஓரே ஒரு சிறுமி மட்டும் அமர்ந்து மகிழ்ச்சியோடு இராகம் ஒன்றை இசைத்துக் கொண்டிருந்தாள். பஸ் அடுத்த ஸ்டாப்பை அடைந்தது. ஒரு வயதான மூதாட்டி ஏறினாள். சிறுமியின் அருகில் அமர்ந்தாள். மூதாட்டிக்கு ஆச்சரியம். இத்தனை பயங்கரமான பாதையில் பஸ்ஸில் வேறு பிரயாணிகள் ஒருவரும் இல்லாத சூழ் நிலைகளில் இந்தச் சிறுமி தைரியமாக அமர்ந்திருக்கிறாளே! கேட்டாள் "பாப்பா" தனியாக, இந்த இருண்ட நேரத்தில் பிராயாணம் செய்ய உனக்குப்பயமாக இல்லையா? சிறுமி சொன்னாள், "இல்லை, ஏனெனில் என் தகப்பனார்தான் பஸ் டிரைவர், அது மட்டுமல்ல நான் இயேசுவின் பிள்ளை. அவர் என்னோடு கூட இருக்கிறார். கிறிஸ்துவின் பிரசன்னத்தை எப்பொழுதும் உணருகிறவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.