தகவல் தொழில் நுட்பத்துறை சார்பான வேலைவாய்ப்புகள் சென்னைப் பட்டணத்தில் அதிகமாயிருந்ததால், கிறிஸ்தவ வாலிபன் ஒருவன் வேலை தேடி அங்கே சென்றான். ஒரு கம்பெனியில் விண்ணப்பித்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. "நான் சென்னைப் பட்டணத்தில் வேலைபார்ப்பது தேவனுக்குச் சித்தமில்லை. எனவேதான் வேலை கிடைக்கவில்லை" என எண்ணி ஊர் திரும்ப ஆயத்தமானான். இன்னும் சில கம்பெனிகளில் முயற்சி செய் என்று சிலர் சொன்னபோது இல்லை... இல்லை "தேவ சித்தம் இருந்திருந்தால் முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்திருக்கும்" என்று கூறி ஊர் திரும்பி விட்டான். ஆனால் இது ஒரு நிதானிப்பு. தேவசித்தம் நமக்குச் சாதகமாக இருந்தாலும் தொடர் முயற்சி என்பது வேதத்திற்கு இசைந்ததே. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுவிப்பதுதான் தேவசித்தம். ஆயினும் அதற்காக அனுப்பப்பட்ட மோசே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. பத்துமுறை முயன்றபின்தான் வெற்றி வந்தது. நாம் தேடுவதும் நாடுவதும் நல்லதாக இருக்கும்போது சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சிப்பது அவசியம். தேவன் நினைத்தால் முதல் முயற்சியிலேயே தரமுடியும் என்ற வாதம் சரியானதல்ல. எலியா ஏழுமுறை ஜெபித்த பின்புதான் மழை வந்தது. தொடர்ந்து பிரயாசப்படுதலும் விசுவாசத்தின் பிரதிபலிப்புதான். இந்த உலகத்தில் தேவ கிருபை நமக்கிருந்தாலும் பலவித போராட்டங்களைக் கடந்துதான் சிலவேலைகளிலும் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். சில முயற்சிகள் தோல்வியைக் கண்டிருக்கலாம். ஆனால் அவைகளால் நாம் கற்கும் பாடங்களும் அடையப் போகும் அனுபவங்களும் பிற்காலம் நாம் அடையப் போகும் வெற்றிகளைத் தக்கவைக்க மிகவும் தேவையானவை. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. நீதிமொழிகள் 3:4-7