ஒரு மனிதன் மிகுந்த கவலையோடு அந்நாட்டு மன்னரிடம் வந்தான். அரசே என் கவலை தீர வழி சொல்லுங்கள் என்று கேட்டான். பொன்னோ நிலமோ கேட்டால் தருவேன் கவலை நீங்க வழி கேட்டால் என்ன செய்வேன் என்று விழித்தார். மன்னரின் பரிதாப நிலை கண்ட மந்திரி அந்த மனிதனை அழைத்து நீ ஊருக்குள் போய் மரணம் இல்லாத வீட்டில் ஒரு பிடி அரிசி வாங்கி வந்தால் மன்னர் உன் வருத்தம் போக்க வழி சொல்லுவார் என்று சொல்லி அனுப்பினார். அவனும் வீடு வீடாய் சென்று ஒரு பிடி அரிசிக்காக உதவிக் கேட்டான். ஆனால் மரணம் நேரிடாத வீடுகள் இல்லாததால் அவனால் ஒரு பிடி அரிசி பெற முடியவில்லை. வெறுங்கையுடன் வந்தவனைப் பார்த்து அரசன் சொன்னான். கவலை, வருத்தம், துக்கம் இல்லாத மனுஷன் உலகில் இல்லை. எப்படி சாவு இல்லாத வீடு இல்லையோ, அதுபோல கவலையில்லாத மனிதன் இல்லை. சரியான பதில் கிடைக்காத அந்த மனிதன் இன்னும் அதிக வருத்தத்தோடே அலைந்து கொண்டிருக்கிறான். மனிதனாய் பிறந்தால் கவலையில்லாத வாழ்வு இல்லை. எந்ததொரு மனிதனும் மற்றொரு மனிதனின் கவலையை வருத்தங்களை துயரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. விடுவிக்க முடியாது. சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர முடியாது. இந்த உலகத்தில் ஒருவாரால் மட்டும் கவலைகளிலிருந்து விடுதலை கொடுக்க முடியும். அவர் தான் இயேசு கிறிஸ்து அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.