ஒரு சிறுவன் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்டான். அன்று முதல் நடக்கும் போதெல்லாம் வெள்ளி கிடைக்குமென்று நினைத்து தரையைப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். முப்பது ஆண்டுகால வாழ்க்கையில் அநேக வெள்ளி நாணயங்களையும், 18478 துணிபட்டன்களையும், (Button) 14369 பின்களையும் (Pin) கண்டெடுத்தான். ஆனால் அந்தோ அவனுடைய முதுகு குன்றிப்போய் பார்ப்பதற்கு அருவருப்பாகத் தோற்றமளித்தான். சூரியனை அவன் பார்த்ததில்லை, இந்த உலகத்தின் நிறங்களை அவன் கண்டதில்லை; மனிதமுகத்தில் காணப்படும், புன்சிரிப்பை அவன் ரசித்ததில்லை. எப்போதும் தரையைப் பார்த்து ஏதாவது கிடைக்குமா என்று நடந்தபடியால் மேலானவைகளை இழந்துபோனான். தேவனுடைய பிள்ளைகளுக்கு மேலான பரலோக பாக்கியத்தை தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஒரு ஸ்தலத்தை உங்களுக்கு ஆயத்தம் செய்யப்போகிறேன் என்று அவர் கூறிச் சென்றிருக்கிறார். அந்த ஸ்தலம் பொன் தளம் போட்ட வீதியையும், சகல விதமான விலையுயர்ந்த கற்களையும், முத்துக்களையும் கொண்ட ஸ்தலமாகும். அந்த ஸ்தலத்தைச் சென்று அடைய வேண்டும் என்ற வாஞ்சையோடு, அதை நோக்கியே நாம் பயணம் செய்ய வேண்டும். இந்த உலகின் ஆசாபசங்களையும், பொருட்களையும், நாடிப் போவோமாகில், ஒரு வேளை அவைகளைப் பெற்றுகொள்வோம். ஆனால் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் மகிமையை நினைத்துப் பார்க்கையில் இவை வெறும் பட்டன்களும், (Button) பின்களுமே (Pin). உங்கள் நோக்கம் பரலோகமாக இருக்கட்டும். உங்கள் வாஞ்சை அங்கு வாழும் இயேசுவை சந்தித்து, அவரோடு நித்திய காலமாக வாழ்வதாக இருக்கட்டும். மகிமையற்றவைகளை நாடி வாழ்க்கையைக் கெடுத்துவிடவேண்டாம். பரலோக வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில் இவ்வுலக வாழ்க்கை வெறும் மாயையே. "பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." கொலோசெயர் 3:2