செல்வமும், ஆணவமும் நிறைந்த டி.ஜே. பேச் என்பவர் வாலிபனாக கோபன்ஹேகன் பட்டணத்தின் ஜனநெருக்கடியான ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எளிமையான உடை உடுத்தியிருந்த ஒரு வாலிபன் இவரிடம் கைப்பிரதி ஒன்றைக் கொடுத்தான். "இவர்களுக் கெல்லாம் வேறு வேலை கிடையாது, தொந்தரவு தந்து கொண்டேயிருப்பான்கள்'' என்று மனதில் வெறுப்பைக்கக்கிக் கொண்டே அந்த கைப்பிரதியை உள்ளங்கையில் வைத்து சுருட்டினார். அந்த வாலிபன் கோபப்படுவதற்குப் பதிலாக, சற்று விலகிச் சென்று சாலையோரமாக முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தான். பேச் இதை சற்றும் எதிர்பார்க்காதபடியால் அவன் அருகில் சென்றார். அவனுடைய கண்களில் நீர்த்துளிகளைக் கண்டதும் மனதில் சற்று மாறுதல் ஏற்பட்டது. "இவன் தன்னுடைய பணத்தையெல்லாம் செலவழித்துக் கைப்பிரதியை வாங்கியிருக்கிறான்; இப்போது எனக்காகத் தன் இருதயத்தையே ஊற்றி ஜெபிக்கிறான்; நானோ இவனிடம் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டேனே'' என்று நினைத்து வருந்திக் கொண்டே வீடு சென்றார். வீடு சென்றடைந்ததும் கிழிந்துபோன அந்த கைப்பிரதியின் துண்டுகளைச் சேர்த்து ஒட்டி அதைக் கவனமாகப் படித்தார். இயேசுவின் அன்பு அவரை ஆட்கொண்டது அந்த வாலிபன் கைப்பிரதியைக் கொடுத்து சரியாக அரைமணி நேரத்தில் பேச் தன் இருதயத்தை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார். இதுவரை இயேசுவுக்குத் தன்னை ஒப்புக்கொடாத ஒரு நண்பனுக்காக, அல்லது உறவினருக்காக இப்போதே கண்ணீர் விட்டு ஜெபியுங்கள்.