கண்ணீர்த்துளிகள் | Tamil Christian Message

"தேவன் இரண்டு தேவ தூதர்களிடம் நீங்கள் பூமிக்குச் சென்று எனக்கு விருப்பமான பொருளை கொண்டு வாருங்கள்" என்று கூறினார். தூதர்கள் இருவரும் பூமிக்குச் சென்று தேவனுக்கு விருப்பமான பொருளைச் சேகரித்துக் கொண்டு திரும்பினர். அப்போது பரலோக வாயிலில் நின்று கொண்டிருந்த மற்றொரு தூதன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் கொண்டு வந்துள்ள தேவனுக்கு விருப்பமான பொருள் என்ன?" என்று கேட்டான். அவர்கள் ஒரு கண்ணாடி பாட்டிலைக் காட்டினார்கள். அவன், "அதற்குள் என்ன இருக்கிறது?" என்றான். "நாங்கள் பூமிக்குச் சென்ற போது ஒரு தேவபிள்ளை அழுது கண்ணீர் விட்டு கருத்தாய் ஜெபித்துக் கொண்டிருந்தான். அந்த கண்ணீர் தேவனுக்கு மிகவும் விருப்பமானது. அதைத்தான் இந்த பாட்டிலில் சேகரித்து வந்திருக்கிறோம்" என்று சொன்னார்கள். இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் ஆழமான கருத்து இருப்பதைக் கவனிக்க வேண்டும். நாம் நமது வாழ்வில் தாங்கமுடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி கண்ணீர் வடித்திருக்கக் கூடும். அந்தக் கண்ணீர் கர்த்தரின் பார்வையில் மிகுந்த மதிப்பு உடையவை. ஆம் நாம் அழுது கண்ணீர் விட்டு ஜெபிக்கும்போது ஆண்டவர் நம்மீது மனது உருகுகிறார். கண்ணீருடன் ஜெபித்த அன்னாளுக்கும் ஆண்டவர் சாமுவேலைத்தந்தார். உங்கள் வாழ்வில் தாங்கமுடியாத பிரச்சனைகள் வரும்போது கண்ணீர் விட்டு அழுது ஜெபியுங்கள். அது தேவனுக்கு விருப்பமானது. அன்று மகதலேனாமரியால் இயேசுவின் பாதத்தில் பூசிய பரிமள தைலம் அவருக்கு விருப்பமாக இருந்தது போல, உங்கள் கண்ணீரும் நமது ஆண்டவருக்கு விருப்பமானதே! ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பிள்ளைகள் சத்தியத்திற்காக வாழும் வாழ்க்கையில் தொல்லைகள் நிச்சயம் உண்டு . எனினும் நாம் ஜெபித்து சிந்தும் கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும், ஆசிர்வாதமாக, நன்மையாக மாறும் ஆம் அவை ஆண்டவரின் கணக்கில் இருக்கின்றன.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create