இரட்சிப்பின் அனுபவம் பெற்ற வாலிபன் ஒருவன் நல்ல இரட்சிப்பின்அனுபவம் உடைய பெண்ணையே திருமணம் செய்ய விரும்பினான். அவ்வித அனுபவம் உடைய ஒரு பெண்ணைக் குறித்துச் சொன்னபோது, ஞாயிறு ஆராதனை வேளையில் அவளை அவன் பார்க்கச் சென்றான். அங்கே அவள் மிக உற்சாகமாகப் பாடுவதையும், அதிக அபிஷேக உந்துதலோடு ஆராதிப்பதையும், கண்டு திருப்தியுற்றான். அவளையே திருமணம் செய்து கொண்டான். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பமானது. அவள் எதற்க்கும் அடம் பிடிப்பதாகவும், தன் பெற்றோரை வெறுப்பதாகவும், யாரையும், மதிக்காமல் பேசுவதாகவும், எந்த நற்குணமும் இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் சண்டை போடுவதாகவும் குற்றஞ்சாட்டினான். உண்மையில் அந்தப் பெண்ணின் ஆராதனை அனுபவத்திற்க்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. நம்முடைய இறை நம்பிக்கை, ஜெபம், வேத வாசிப்பு, விசுவாசம், ஆராதனை, பக்தி, செயல்கள் யாவையும் தனித்த நிலையில் பயனுள்ளவைகள் அல்ல. அவைகளின் பிரதிபலிப்புகளை வாழ்க்கையில் காணவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அல்லது அனுபவம் உண்மையிலேயே பரிசுத்த ஆவியினால் ஏற்பட்டதா அல்லது சுய பக்திப்பிரியத்தால் ஏற்பட்டதா என்பதைக் கவனிக்கவேண்டும். வாழ்க்கையில் உயர்குணங்களையும், பண்புநிலைகளையும் ஏற்படுத்தாத ஆவிக்குரிய அனுபவங்கள் போலியானவயே. ஆவியின் கனி சகல நற்குணத்திலும், நீதியிலும் விளங்கும். எபே 5:9