போதகரும் நடிகரும்| Tamil Christian Message

பிரபல நடிகர் ஒருவர் இருந்தார். இனிய குரலில் அழகாகப் பேசுவார். சத்தத்தை உயர்த்தியோ, தாழ்த்தியோ, பொருளுக்கேற்ப கவர்ச்சிகரமாகப் பேசுவார். ஒரு நாள் அவருடைய நண்பர் வீட்டில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. ஏராளமான விருந்தாளிகள் வந்திருந்தனர்; இந்த நடிகரும் வந்திருந்தார். விழா நிகழ்ச்சிகளில் அந்த நடிகருக்கும் ஒரு பங்கு கொடுக்க யாவரும் விரும்பினர். அவரும் அதற்குச் சம்மதித்தார். அவர் முறை வந்தபோது, மேடைக்கு வந்தார். "எந்த வார்த்தையை அபிநய நடிப்புடன் நான் சொல்லவிரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். சற்று நேர அமைதிக்குப்பின் ஒரு போதகர் எழும்பி, 23ஆம் சங்கீதத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். வேதப் பகுதியன்றைச் சொல்லுவார்களென்று நடிகர் எதிர்பார்க்கவில்லை. சில வினாடிகள் தயக்கத்துடன் காட்சியளித்தார். பின் போதகரை நோக்கி: "நல்லது, கவர்ச்சிகரமாக அதை ஒப்பிக்க என்னால் கூடும்; ஆயினும் ஒரு நிபந்தனை; நான் ஒப்பித்தபின், நீரும் அதை ஒப்பிக்க வேண்டும்'' என்றார். போதகரும் இப்படி ஒரு நிபந்தனையை எதிர்பார்க்கவில்லை. அவர் நடிகரை நோக்கி: "உம்முடைய நடிப்புத் திறமையில் ஒரு சிறிய பகுதி அளவுகூட என்னிடம் கிடையாது. ஆயினும் அப்படி ஒரு நிபந்தனையை நீர் விதிப்பதாயிருந்தால், உமக்குப்பின் நானும் அதை ஒப்பிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை'' என்றார். நடிகர் முதலாவது அதை மனப்பாடமாக அபிநயத்திடன் ஒப்பிக்க ஆரம்பித்தார். ஆஹா! எவ்வளவு இனிமை! கம்பீரமான குரல்; பொருத்தமான அபிநயம்: விருந்தாளிகள் அப்படியே வியந்துவிட்டனர். நடிகர் ஒப்பித்து முடிந்ததும், பலத்த கரகோஷம்; வானைப் பிளக்கும் ஆரவாரம்; ஏகப் பாராட்டு. பின் போதகரின் முறை. ஒப்புக்கொண்டபடி அவரும் மேடைக்கு வந்தார். தமது பாணியிலே ஒப்பிக்க ஆரம்பித்தார். நடிகரின் சிறப்புகள், போதகரின் ஒப்பித்தலில் இல்லை. குறைந்த இனிமை; கரகோஷம் இல்லை; ஆரவாரம் இல்லை; பாராட்டு இல்லை. ஆனால்...? ஒரே நிசப்தம்; தலைகுனிந்த நிலை; ஆறாய் பெருகின கண்கள்; அத்தனை கவர்ச்சியா? இல்லை, அத்தனை இதய உணர்ச்சி; உணர்ச்சிவசத்தால் கண்ணீர்; அதைச் சிந்தாத கண் ஒன்றுகூட அங்கு இல்லை. சில வினாடிகள் அமைதிக்குப்பின், நடிகர் மீண்டும் மேடைக்கு வந்தார். சில வார்த்தைகள் பேச விரும்பினார். மிகுந்த உணர்ச்சிவசத்தால், அவரால்கூட வழக்கம்போல் பேச முடியவில்லை. தளதளக்கும் குரலில்: "நண்பர்களே, எனது திறமையால் உங்கள் கண்களைக் கவர்ந்தேன், உங்கள் செவிகளையும் கவர்ந்தேன். இவரோ உங்களுடைய உள்ளங்களையே தொட்டுவிட்டார். எங்கள் இருவரின் ஒப்பிப்பதலிலும் ஒரு பெரும் வித்தியாசம்! நான் இந்த மேய்ப்பர் சங்கீதத்தை மாத்திரம் அறிந்தவனாயிருக்கிறேன்; அவரோ அந்த சங்கீதத்தின் மேய்ப்பிரையே அறிந்தவராயிருக்கிறார்!'' என்றார். "ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்'' (யோவான்.17:3)

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create