மாரிடின் லுத்தர் இறையியல் கற்பதற்கும் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்ப்பதற்கும் உறுதுணையாய் இருந்தவர் யார்? டி.எல். மூடியை கிறிஸ்து இயேசுவிடம் வழிநடத்தியது யார்? இந்தியாவில் வில்லியம் கேரியின் ஊழியத்திற்கு பெரிதும் உதவியவர் யார்? ஹட்சன் டெய்லரை சந்தித்து சீன தேசத்தின் தரிசனத்தை ஊற்றியது யார்? பவுல் காவற்கிடங்கிலிருந்த போது அவனை உற்சாகப்படுத்தியது யார்? ஜிம் எலியட்டுக்கு ஆக்கா மக்கள் இனத்திற்கு இயேசு தேவை என்று உணர்த்தியது யார்? யார் இவர்கள்? கண்டுபிடிக்க முடியாத முகங்கள்; பலருக்கு தெரிந்திராத இந்த முகங்கள் கிறிஸ்துவுக்குள் முக்கிய முகங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்;. அறியப்படாத இவர்களை அவசியமில்லாதவர்கள் என்று நினைக்கக்கூடாது. சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.1கொரிந்தியர் 12:17,18 சிலரை மறைத்து சிலரை வெளிப்படுத்துவது தேவனின் தனிச்சிறப்பு. அறியப்படாமல் ஊழியம் செய்கிறேன் என்று சோர்ந்துவிட்டாயா? நண்பா, தேவன் உன்னை லுத்தருக்கு பதிலாக மெலன்க்தானாகவும், மூடிக்கு பதிலாய் அவரை கர்த்தருக்குள் வழிநடத்திய கிம்பாலாகவும், பவுலுக்கு பதிலாய் ஒநேசிபோருவாகவும், டெய்லருக்கு பதிலாய் ஹேஸ்டேவாகவும் பயன்படுத்த விரும்பினால் அவரின் சித்தத்திற்கு இடங்கொடு, தெரிந்திராத இந்த தேவபிள்ளைகள் மூலம்தான் தேவன் உருவாக்கிய பாத்திரங்கள் உலகில் பல லட்சங்களுக்கு பிரயோஜனமாயிருந்தது. கர்த்தருக்குள் உன்னை திடப்படுத்திக்கொள். நீ அதிகம் அறியப்படாத பாத்திரம்தான் ஆனால் இயேசுவின் ராஜ்யத்திற்கு நீ இன்றியமையாத பாத்திரம். சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. (1கொரிந்தியர் 12:22-24)