நமக்கு விரோதமாக யாராகிலும் செயல்பட்டு, நாம் அநீதியாகத் துன்பப்படுத்தப்படும்போது நம்முடைய மனம் மிகவும் சோர்ந்துபோய் விடுகிறது. ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் வந்து கொண்டிருக்கும்போது மரணமே மேல் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறோம். இப்படிப்பட்ட வேளையில் நமது பிரதான முன் மாதிரியான இரட்சகர் அநீதியாக பட்டப்பாடுகளை நினைத்துப்பார்க்க வேண்டும் அது ஆறுதலாக அமையும். ரோஜர் காம்ப்பெல் என்ற போதகரை ஒரு முறை சபையிலேயே மிகவும் துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்மணி சந்தித்தார்கள். தன் எந்தவிதக் காரணமுமின்றி அவமதிக்கப்படுவதையும் , கேலிசெய்யப்படுவதையும் அந்த அம்மையார் கூறி, கண்ணீர் விட்டு கலங்கி அழுதார்கள். போதகர், ரோஜர் மிகவும் கரிசனையோடு கேட்டுக் கொண்டேயிருந்தார். அம்மையார் பேசி முடித்தபின்" உங்களை இரட்சிக்க மனுவுரு எடுத்த நம் இரட்சகரின் முகத்தில் காரணமின்றி துப்பி, முகத்தில் குட்டி, தாடியை பிடித்து இழுத்தார்களே; அதை நீங்கள் அறிந்ததில்லையா? அவர் அநீதியாகப் பட்ட பாடுகளை நினைத்துப் பார்க்குபோது, நீங்கள் அனுபவிக்கும் துன்பம் அதிகமா?'' என்று கேட்டார். அம்மையார் மனதில் புது வெளிச்சம் உதித்தது. என் இரட்சகர் எனக்காகப் பட்ட பாடுகள் எத்தனை அதிகம் என்று நினைத்து, தன் பாடுகளை இனிமேல் ஒரு பொருட்டாக எண்ணப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு சென்றார்கள். மனதில் சமாதானம் உண்டாயிற்று. ஒரு வேளை நீங்கள் இப்போது அநீதியாகத் துன்பப்படுத்தப்படலாம்; கேவலப்படுத்தப்படலாம், நீங்கள் கவலைப்பட்டு மனம் குன்றிப் போவதற்க்கு பதிலாக, உங்கள் இரட்சகரின் பாடுகளை நோக்கிப் பாருங்கள்; உங்கள் வேதனை ஒரு பொருட்டாகவே இருக்காது. "....தேவ வல்லமைக்கேற்படி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி" 2 தீமோ 1:8