ஐந்து பேர் கொண்ட படகு ஒன்று கடலில் பயணம் மேற்கொண்டது. படகில் பயணித்த அனைவரும் தங்கள் கடற்பிரயாணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும், உணவு, தண்ணீர் முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு தங்கள் பிரயாணத்தை துவங்கினர். பயணிகள் அனைவரும் சந்தோஷமாய் ஆடல்பாடலுடன் இனிதே பயணித்தனர். இப்படியிருக்க ஒருநாள் கடலில் கடும் புயல்காற்று வீசியது. இதனால் படகு நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்தது. எனவே திட்டமிட்ட நாட்களுக்கு அக்கரைக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். உடன் கொண்டு வந்திருந்த தண்ணீர் கிட்டாதென்று அங்கலாய்த்தனர். ஆனால் கடலில் குடிநீருக்கு எங்கே போவது, ஏதாவது கப்பல் உதவிக்கு வருமா? என்று வகைத் தேடினர். அப்படியே தூரத்தில் ஓர் கப்பல் தெரிந்தது.படகிலிருந்தபடியே செய்கை மூலம் தங்கள் தேவையைத் தெரியப்படுத்தினர். ஆனால் கப்பலின் கேப்டன் அளித்த பதிலோ படகிலிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. காரணம் உடனே உங்கள் குடுவைகளை கடலுக்குள் இறக்கி தண்ணீர் மொண்டு குடியுங்கள் என்பதே அந்த செய்தி. ஒரு பக்கம் எத்தனை முட்டாள்தனமான யோசனை இது என்று எண்ணிய போதிலும் அதையும் செய்து பார்க்க முனைந்தனர். குடுவைகளை இறக்கி தண்ணீர் மொண்டு குடித்தபோது அனைவருக்கும் ஆச்சரியம். காரணம் அதிலிருந்து சுவையான குடிநீர். இது எப்படி சாத்தியமாயிற்று? ஆம் அந்த இடத்தில் தான் ஆற்றுநீர் கடலில் கலக்கிறது. அதை அறியாத அவர்கள் வீணாய் கவலைப்பட்டனர். நண்பர்களே, நாமும் கூட சில வேளைகளில் இயேசுவை அருகில் வைத்துக்கொண்டு வீணாய் உலகத்தின் காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறோம். ஞானம் இல்லை என்கிறோம். பரிகாரர் இயேசுவை அறிந்த நாம் நோயைக் குறித்து கவலைப்படுகிறோமே! கவலைப்படாதே, உன் பெரிதான பிரச்சனைகளை விட இயேசுவே பெரியவர். அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.