மேரி ஸ்லெஸ்ஸர் 1848ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தபடியால், 11 வயது நிரம்பியபோதே தன்னுடைய குடும்பத்தைத் தாங்குவதற்காக அருகிலிருந்த தொழிற்சாலையில் பணிபுரியவேண்டிய நிலை ஏற்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு அதன்பிறகு இரவு பாடசாலைக்கு சென்று படித்துவந்தார். வேதாகமத்தையும் வாசிப்பதுண்டு. ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை அதிகமாக நேசித்தார். மேரியின் தாயார் அடிக்கடி தம் பிள்ளைகளை அழைத்து இயேசுகிறிஸ்துவின் அன்பைப் பற்றியும், ஆப்ரிக்காவில் உள்ள பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை பற்றித் தெரியாது என்றும் எடுத்துச் சொல்வார். தன் தாயாரிடமிருந்து மிஷனரி பணிக்கான ஒரு ஆழ்ந்த பாரத்தை மேரி பெற்றுக் கொண்டார். மிஷனரியாகப் போவதற்கு முன் தன் சொந்தப் பட்டணத்தில் சாட்சியாக விளங்கினார். ஆப்ரிக்காவில் மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் அங்கு இறந்துவிட்டார் என்ற செய்தி ஸ்காட்லாந்து தேசத்தில் பரவியது. அந்த இடத்திற்கு இனி யார் சென்று ஊழியப் பணியை தொடருவார் என்ற கேள்வி எழுந்தபோது இந்த அறைகூவல் ஆப்பிரிக்காவிற்கு செல்வதற்கான மேரியின் அழைப்பை உறுதிசெய்தது. 1876 ம் ஆண்டு மேரி ஸ்லெஸ்ஸர் ஆப்பிரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்று ட்யூக் டவுண் என்ற கடற்கரை பட்டணத்தை அடைந்து 4 ஆண்டுகள் தங்கியிருந்து அந்த நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம் முதலியவற்றை நன்கு அறிந்துகொண்டார், அங்கே சாதாரண உணவை உண்டு மக்களுக்கு உடைகளை தயாரித்து, எழுதப் படிக்க கற்றுக்கொடுத்து, பிணிகளை நீக்கும் செவிலித் தாயாகவும் சேவை செய்தார். அதேநேரம் ஆண்டவரைப்பற்றியும் சொல்லிவந்தார். அக்காலத்தில் இருண்டகண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவில், ஒருதாய்க்கு இரட்டைப்பிள்ளைகள் பிறந்தால் அது தீய ஆவியின் செயல் என்று கருதப்பட்டது. அக்குழந்தைகள் மூலம் அக்குடும்பத்திற்கு கேடு விளையும் என்று நினைத்தார்கள். ஆதலால் அப்பிள்ளைகளை பிறந்த வீட்டிலேயே கொன்று விடுவார்கள். அதுமட்டுமன்றி தாயையும் வீட்டைவிட்டு விரட்டிவிடுவார்கள். மேரி அந்த இரட்டைப்பிள்ளைகளை எடுத்து தம்முடன் வைத்து வளர்த்து இந்த கொடிய பழக்கம் நீங்க உழைத்தார். ஆண்டவர் இயேசுவை அம்மக்கள் அறிந்தால் மட்டுமே அக்கொடிய பழக்கத்திலிருந்தும் அதைப்போன்ற எல்லா கொடிய பழக்கங்களிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். ஆகவே, அம்மக்களுக்கு ஆண்டவர் இயேசுவைப் பற்றியும் அவருடைய அன்பைப் பற்றியும் அறிவிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்து மிஷனரி பணிசெய்தார். "வெள்ளை அரசி'' என்றும் "அம்மா ஸ்லெஸ்ஸர்'' என்றும் அழைக்கப்பட்ட அவர் சைக்கிளில் பிரயாணம் செய்து கிராமங்களில் சேவை செய்துவந்தார். நடமாட முடியாத நிலையிலும் படுக்கையிலிருந்தவாறே ஜெபித்துக் கொண்டிருப்பார், இறுதியாக 1915 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் நாள் பரம ராஜாவின் சந்நிதியை அடைந்தார்